பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி இன்று வரை 21ஆவது நாளாக ஈரானில் போர் நீடிக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டு ராணுவ நடவடிக்கை எடுத்து வருகின்றன, பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அதிகமாக மோதி கொள்வது இஸ்ரேலும் ஈரானும் தான்.
நீண்ட காலமாகவே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் பகை இருந்து வருகிறது. ஈரான் கைவசம் அணு ஆயுதங்கள் இருப்பது உலகிற்கே ஆபத்தானது என தொடர்ச்சியாக கூறி வருகிறது இஸ்ரேல். கடந்த ஆண்டு கூட ஒருமுறை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டு பின்னர் தணிந்தது. இந்த முறை போர் தீவிரமாக இருப்பதற்கு காரணம் அமெரிக்காவும் இஸ்ரேலுடன் இணைந்து நடத்தி வரக்கூடிய தாக்குதல் தான்.

இஸ்ரேலை பொறுத்தவரை ஈரானின் தலைமை பொறுப்பில் இருக்கும் அனைவரையும் அழிப்போம் என சூளுரைத்துள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஈரானால் இனி தலை தூக்கவே முடியாது என கூறியிருக்கிறார். ஈரான் தற்போது மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது என்றும் அந்த நாடு யுரேனியம் செறிவூட்டும் மற்றும் அணு ஆயுதங்கள் , ஏவுகணைகள் தயாரித்த உள்ளிட்டவற்றை இனி நினைத்து கூட பார்க்க முடியாத நிலைமை வந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

மிக மோசமான நிலைக்கு ஈரான் சென்று விட்டது என கூறியிருக்கும் அவர் தேவை இருக்கும் வரை ஈரான் போர் நீடிக்கும் என கூறியிருக்கிறார். இருந்தாலும் நாம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே இந்த போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு தென்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் நாட்டில் ஆட்சியாளர்கள் மத்தியிலேயே தற்போது பிளவு ஏற்பட்டு இருக்கிறது என கூறுகிறார்.
ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு துறை செயலாளர் அலி லர்ஜானி, படைத்தளபதி சுலைமான் என முக்கியமான பலரும் கொல்லப்பட்டுள்ளனர். புதிய தலைவராக தேர்வான மொஜ்தபா கமேனியும் காயமடைந்த நிலையில் இருக்கிறார். இந்த சூழலில் யார் தற்போது ஈரானை நிர்வாகம் செய்து வருகிறார்கள் போரை வழி நடத்தி வருகிறார்கள் என்பதே தெரியவில்லை.
இதனை குறிப்பிட்டு பேசியிருக்கும் நெதன்யாகு ஈரான் தலைமையிலேயே பிளவு ஏற்பட்டு இருக்கிறது, யார் நாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது என அவர்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு வருகிறார்கள் என குறிப்பிடுகிறார். இதுவரை மொஜ்தபா தன்னுடைய முகத்தை கூட வெளியில் காட்டவில்லை என கூறும் அவர் தலைவர் பதவியை பிடிப்பதில் பல போட்டிகள் நடக்கின்றன என குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல ராணுவத்திலும் இந்த பிளவுகள் அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம் என கூறியிருக்கிறார்.
மேலும் தான் கொல்லப்பட்டு விட்டதாக வெளியான செய்திகளை மறுத்த அவர் நான் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியதை நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக தான் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications