உலகிலேயே மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ் கொரோனா காலத்தில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று பண மழையில் நனைந்தது.
ஆனா, கொரோனா தொற்று பின்பும் எல்லோரும் ஆபீஸ்-க்குக் கிளம்பிய பின் மொத்த கதையும் மாறியது. வாடிக்கையாளர் இழப்பு, சப்ஸ்கிரிப்ஷன் கட்டுவதில் நிறுத்தம், வருவாய் சரிவு, லாபம் குறைவு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டது.
இதனால் நெட்பிளிக்ஸ் புதிய வர்த்தகத் துறைக்குள் நுழைய முடிவு செய்துள்ளது.
நெட்பிளிக்ஸ்
வர்த்தகம், வருவாய் சரிவை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காகப் புதிய துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இப்படித் தேர்வு செய்ய முடிவு செய்த துறை தான் கேமிங்.
பின்லாந்து
மார்ச் மாதமே நெட்பிளிக்ஸ் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த மொபைல் கேம் டெவலப்பர் நிறுவனமான நெக்ஸ்ட் கேம்ஸ்-ஐ சுமார் 72 மில்லியன் டாலருக்கு கைப்பற்ற உள்ளதாக அறிவித்தது. 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் தான் பின்லாந்து நாட்டின் பங்குச்சந்தையில் முதன் முதலில் பட்டியலிடப்பட்டது.
ஸ்பெஷாலிட்டி
இந்த நெக்ஸ்ட் கேம்ஸ் நிறுவனத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், இந்நிறுவனம் திரைப்படம், வெம் சீரியஸ், புத்தகங்கள் அடிப்படையிலான கேம்களை உருவாக்குவதில் கில்லாடி. நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் அதிகப்படியான பொழுதுபோக்குக் கன்டென்ட் இருக்கும் நிலையில் இதை வர்த்தகமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
NETFLIX கேமிங் பிரிவு
NETFLIX கேமிங் பிரிவை உருவாக்க உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் பின்லாந்து நாட்டில் முதல் பார்ட்டி ஸ்டுடியோவை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஸ்டுடியோ பிரிவின் இயக்குநராக மார்கோ லாஸ்டிக்கா-வை (Marko Lastikka) நியமிப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்தது.
புதிய தலைவர்
Marko Lastikka எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் மற்றும் ஜிங்கா ஆகிய இரண்டு பெரிய கேமிங் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார், மேலும் மொபைல் கேம்களுடன் பணிபுரிந்த பல வருட அனுபவத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்குக் கொண்டவர உள்ளார். இதைத் தொடர்ந்து Night School Studio மற்றும் Boss Fight Entertainment ஆகியவற்றையும் கைப்பற்ற உள்ளது.