இந்தியர்களின் மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்துகிறோம். அரசின் நலத்திட்டங்களை பெறுவது தொடங்கி ஒரு சிம்கார்டு வாங்குவது, முதலீடு செய்வது , வங்கி கணக்கு தொடங்குவது என பெரும்பாலான இடங்களில் நம்முடைய அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை தான் கேட்கிறார்கள். அந்த வகையில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை முக்கியமான அடையாள ஆவணமான ஆதார் அட்டை வாங்கி வைத்திருப்பது கட்டாயமானதாக இருக்கிறது.
நம்முடைய ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களும் அப்டேட்டாக வைத்திருப்பதும் அவசியம். இல்லை என்றால் பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்காமல் போகலாம். குறிப்பாக ரேஷன் கார்டுகள் மூலம் கிடைக்கும் மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்களும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. உங்களுடைய மொபைல் நம்பரை மாற்றி இருக்கிறீர்கள் அல்லது வேறு வீட்டிற்கு குடியேறுகிறீர்கள் என்பன போன்ற சமயங்களில் உடனடியாக ஆதாரில் அந்த தகவல்களை அப்டேட் செய்து விடுவது நல்லது.

வழக்கமாக ஆதார் தொடர்பான தகவல்களை நாம் mAadhaar App என்ற செயலி வாயிலாக தான் பெற்று வந்தோம். ஆனால் கூடிய விரைவில் எம் ஆதார் செயலி செயல்படாது என யுஐடிஏஐ அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. பொது மக்களால் இனி எம் ஆதார் செயலியை பயன்படுத்த முடியாது, கூடிய விரைவில் இந்த செயலி நிறுத்தப்படுகிறது என்றும் இதற்கு பதிலாக புதிய செயலி பயன்பாட்டுக்கு வருகிறது என்றும் யுஐடிஏஐ தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருக்கிறது.
எம் ஆதார் செயலியை தங்கள் ஃபோனில் இருந்து அன்இன்ஸ்டால் செய்துவிட்டு புதிய ஆதார் செயலியை (Aadhaar App ) பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதில் ஆதார் சேவைகளை இன்னும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பெற முடியும் என தெரிவித்திருக்கிறது. எனவே பொதுமக்கள் தங்களுடைய மொபைல் போனில் எம் ஆதார் செயலி இருந்தால் அதனை அன்இன்ஸ்டால் செய்து விட்டு புதிய ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது. பழைய ஆதார் செயலிக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஆதார் செயலி பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது.
நம்முடைய ஆதார் தகவல்களை சரி பார்க்கும் விதம் நம்முடைய எந்த மாதிரியான தகவல்களை நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் நம்முடைய பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த ஒரு செயலிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் ஆதாரில் நம்முடைய தகவல்களை அப்டேட் செய்வதற்கான பல்வேறு பிரத்தியேக வசதிகளும் புதிய ஆதார் செயலியில் உள்ளது என யுஐடிஏஐ அமைப்பு கூறி இருக்கிறது.
ஆதார் தகவல்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதும் நம்முடைய அடையாளங்கள் திருடப்படுவதும் தடுக்கப்படுமாம். இந்த புதிய ஆதார் செயலி வாயிலாக முக அடையாள சரிபார்ப்பு ,qr கோடு சரிபார்ப்பு உள்ளிட்ட வசதிகள் கொண்டுவரப்படடுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுடைய கைவிரல் ரேகை, முக அடையாளம் , கருவிழி உள்ளிட்ட தரவுகளை யாரிடம் பகிரலாம் யாரிடம் பகிரக்கூடாது என்பதை லாக் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்களுக்கு தங்களின் தகவல்கள் பாதுகாக்கும் முழு கட்டுப்பாடு கிடைக்கிறது.
முதலில் பிளே ஸ்டோரில் Aadhaar App பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும் இதனை அடுத்து ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இதில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதன் பின் ஆதார் சேவைகளை பெறலாம். இதற்கிடையே பொதுமக்கள் தங்களுடைய முகவரி உள்ளிட்ட தகவல்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்வதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications


