நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு சாதகமாக இருந்தாலும்.. ஒரு சில பிரச்சினைகளையும் சேர்த்துக் கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னர் தங்களுடைய மனக்கவலைகளை எல்லாம் பிள்ளைகள் பெற்றோரிடம் பகிர்ந்தனர். ஆனால் இன்று பல இளைஞர்கள் மனிதர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ சாட்பாட்களிடம் அதிகம் உரையாடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத்தளங்களில் மெட்டா AI சாட்பாட்டுடன் டீனேஜர்கள் அதிகம் உரையாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மனநலம் சார்ந்த பிரச்சினைகளில் இருக்கும் டீனேஜர்களுக்கு AI சாட்பாட்கள் தவறான பதில்களை வழங்குவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதைக் கருத்தில் கொண்டு மெட்டா நிறுவனம் தற்போது ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
கடும் மன உளைச்சலில் இருக்கும் டீனேஜர்கள் மெட்டா AI-யிடம் சென்று தங்களை தாங்களே துன்புறுத்திக் கொள்ளும் விஷயங்களை கேட்டாலோ அல்லது தற்கொலை எண்ணத்தில் பேச தொடங்கினாலோ அது குறித்த விவரங்களை மெட்டா நிறுவனம் அவர்களுடைய பெற்றோருக்கு அனுப்பவுள்ளது.

எந்தெந்த நாடுகளில் கிடைக்கும்?: முதற்கட்டமாக இந்த வசதி இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பெற்றோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மெட்டா நிறுவனம் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக நாடுகளுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது.
தங்கள் பிள்ளைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்பதை பெற்றோருக்கு தெரிவிக்கும் போது அவர்களுக்கு என்ன மன உளைச்சல் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டு... மெட்டா நிறுவனம் மற்றொரு முன்முயற்சியையும் கையில் எடுத்திருக்கிறது. அந்த வகையில் ஏதாவது ஒரு டீனேஜர் தற்கொலை பற்றி சாட்பாட்-டிடம் பேசினால் அப்படியே அது பெற்றோருக்கு அனுப்பப்படாது.
பெற்றோருக்கு அனுப்புவதற்கு முன்பு மனிதர்கள் அதை படித்துவிட்டு எந்தெந்த விஷயங்களை அனுப்பலாம் என முடிவு செய்து அனுப்புவார்கள் என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் உரையாடும் டீனேஜரின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றாலும் எச்சரிக்கை அனுப்பப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய அம்சத்தின் மூலம் ஒரு டீனேஜர் அடிக்கடி தற்கொலை பற்றி சாட்பாட்டில் தேடினால் அது குறித்து அறிவிப்பு பெற்றோருக்கு அனுப்பப்படும். அதோடு ஒரு வாரத்தில் அவர்களுடைய பிள்ளைகள் எந்தெந்த விஷயங்களை பற்றி பேசினார்கள் என்பதையும் பெற்றோரால் பார்க்க முடியும். ஆனால் முழுவதுமாக அவர்கள் பேசியதை படிக்க முடியாது. சாட்பாட்டில் ஏற்கனவே ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காதல் மது மற்றும் பாலியல் சார்ந்த விஷயங்களை AI-யிடம் பேச முடியாது.
இதற்கு கூடுதலாக மற்றொரு சிறப்பான விஷயத்தை மெட்டா AI செய்து வருகிறது. டீனேஜர்கள் மட்டுமல்ல பெரியவர் முதல் சிறியவர் வரை யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாக தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் எமர்ஜென்சி சர்வீஸுக்கு தெரிவிக்கும் புதிய வசதியையும் உருவாக்கி வருகிறது.
இந்த புதிய வசதி கண்டிப்பாக பெற்றோருக்கு உதவும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மன அழுத்தத்தையே நிறுவனங்கள் அனுப்பும் நோட்டிபிகேஷன் மூலம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு நாம் தள்ளப்பட்டிருப்பது தான் வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தினசரி அடிப்படையில் பேசினால் இது போன்ற பிரச்சனைகள் கண்டிப்பாக குறையும் என்பதே நிதர்சன உண்மை.


Click it and Unblock the Notifications
