பொதுவாக வல்லரசு நாடுகளில் அதிகளவிலான பணக்காரர்கள் இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் வளரும் நாடுகளில் தான் அதிகளவிலான புதிய பணக்காரர்கள் இருப்பார்கள். இதுபோன்ற வளரும் நாடுகள் எப்போதும் வல்லரசு நாடுகளுக்கு ஆபத்து தான். இப்படிப்பட்ட ஒரு நிலை தான் தற்போது சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் உருவாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டை போலவே இந்த ஆண்டு ஹூரன் நிறுவனம் உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் எப்போதும் இல்லாத அளவிற்குப் புதிய பணக்காரர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகமாக உள்ளது.
ஆடிப்போன அமெரிக்கா
ஹூரன் நிறுவனம் வெளியிட்டுள்ள குளோபல் ரிச் லிஸ்ட் அறிக்கையில் உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 799 பணக்காரர்கள் 2020ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அப்படியிருக்கையில் இந்த வருடம் சீனாவில் (தைவான், ஹாஹ்காங் உட்பட) இருந்து மட்டும் சுமார் 182 புதிய பணக்காரர்கள் இப்பட்டியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் அமெரிக்காவில் இருந்து வெறும் 59 புதிய பணக்காரர்கள் மட்டுமே இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ்
புதிய பணக்காரர்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் உலகின் 2வது பெரிய பொருளாதார நாடான சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது சீனாவில் ஆன்லைன் கல்வி, ஆன்லைன் கேம்ஸ், மருந்து நிறுவன பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
இந்த மோசமான தருணத்திலும் சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரச்சனை
தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் யாரையும் வெளியில் செல்லக்கூடாது எனச் சீன அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அந்நாட்டில் தற்போது ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ஆன்லைன் சேவை நிறுவன பங்குகள் மீது அதிகளவிலான முதலீடு குவிந்து வருகிறது.
ஒரு வருட வளர்ச்சி
2020 ஜனவரி வரையிலான ஒரு வருட காலத்தில் சீனாவில் டெக் நிறுவன பங்குகள் சுமார் 77 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் பார்மா நிறுவன பங்குகள் 37 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.