இந்திய அரசு புதிய கிரிப்டோ மசோதா-வை தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது, குறிப்பாகப் பல முக்கியக் காரணிகளைக் கவனத்தில் கொண்டு மக்களைப் பண மோசடி செய்யும் கும்பலில் இருந்து காப்பாற்றவும், வரி ஏய்ப்புச் செய்பவர்களை வருமான வரி வலைக்குள் கொண்டு வரவும் திட்டமிட்டு அதற்கான மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் மற்றும் வருமான வரித்துறை இணைந்து பணியாற்றி வருகிறது.
இதன் மூலம் இந்தியாவில் கிரிப்டோகரன்சி மற்றும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்ய மத்திய அரசுக்குத் திட்டம் இல்லை என்பது முழுமையாகத் தெரிகிறது. இதனால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் எவ்விதமான பயமும் இல்லாமல் தொடர்ந்த வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
இந்நிலையில் தற்போது புதிய கிரிப்டோ மசோதா குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ்சேஞ்ச் டூ எக்ஸ்சேஞ்ச்
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை ஒழுங்கு முறைப்படுத்த மத்திய அரசு பல புதிய மாற்றங்களை வர்த்தகம் மூலமாகவும் சட்ட ரீதியாகவும் செய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் புதிய கிரிப்டோ மசோதா மத்திய அரசு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் டூ எக்ஸ்சேஞ்ச் மத்தியிலான வர்த்தகப் பரிமாற்றத்தை மொத்தமாகத் தடை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிரிப்டோ வேலெட்
இதுமட்டும் அல்லாமல் கிரிப்டோ வேலெட் உரிமையாளரின் தரவுகளை வெளிப்படையாகப் பகிராத வேலெட், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச், இதேபோல் 4000த்திற்கும் அதிகமான கிரிப்டோவை வர்த்தகம் செய்யத் தடுக்கும் கூகுள் க்ரோம் எக்ஸ்டென்ஷன்-ஐ மொத்தமாகத் தடை செய்யும் புதிய விதிகளைக் கிரிப்டோ மசோதாவில் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது.
டிமேட் கணக்கு
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகம் செய்ய டிமேட் கணக்கு இருப்பது போல், கிரிப்டோ வர்த்தகச் சந்தைக்கும் பொதுவான ஒரு கணக்கு முறையைக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிடப்பட்டு வருகிறது.
டெபாசிட் மற்றும் வித்டிரா கண்காணிப்பு
மேலும் இந்தியாவில் கிரிப்டோ எக்ஸ்சேஞ் சேவை அளிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் தான் வர்த்தகம் செய்ய வேண்டும் எனக் கட்டுப்பாட்டையும் கொண்டு வர உள்ளது. இதுமட்டும் அல்லாமல் தத்தம் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்-ல் டெபாசிட் மற்றும் வித்டிரா செய்யப்படும் ரூபாய்களைத் தொடர்ந்து மத்திய அரசு கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளது.
காலாண்டு வாரியாகக் கணக்கு
இதன் வாயிலாக இந்தியாவில் இருக்கும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் அமைப்புகளும் மத்திய அரசுக்கு காலாண்டு வாரியாக மொத்த கணக்கைக் காட்ட வேண்டிய சூழ்நிலை தானாக உருவாகும். இதன் மூலம் கருப்புப் பணம், வரி ஏய்ப்பு போன்றவற்றைத் தடுக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
பாதுகாப்பு
மத்திய அரசு தற்போது உருவாக்கி வரும் புதிய கிரிப்டோ மசோதா மூலம் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு அளிக்கும் பாதுகாப்பை கிரிப்டோ வர்த்தகத்திற்கும் அளிக்க வேண்டும் என்பது தான் அடிப்படை கருத்தாக உள்ளது. கிரிப்டோ மசோதா -வை உருவாக்கும் பணியில் ஆர்பிஐ மற்றும் செபி-யும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் வரிக்கு வாய்ப்பு
புதிய கிரிப்டோ மசோதா மூலம் மக்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவே முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதனால் புதிதாக முதலீடு செய்பவருக்கும், ஏற்கனவே முதலீடு செய்பவருக்கும் எவ்விதமான பாதிப்பும் இருக்காது. இதே வேளையில் கிரிப்டோ முதலீட்டு மீது கிடைக்கும் லாபத்திற்கு அதிக வரி விதிக்க வாய்ப்பு உள்ளது.