இந்தியாவின் அதிக வருமானத்தை பெற்று வரும் அரசுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ரயில்வே அவ்வப்போது பல மாற்றங்களை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்தவகையில் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் டெல்லி, மும்பை, அகமதாபாத் போன்ற ரயில் நிலையங்களை புதுப்பிக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்த பட்டியலில் எந்தெந்த நகரங்களின் ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன, எந்தெந்த விதத்தில் புதுப்பிக்கப்பட உள்ளது என்பதை தற்போது பார்ப்போம்.
நவீனமயமாகும் ரயில் நிலையங்கள்
டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் ரயில் நிலையங்கள் விரைவில் நவீன தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புகளுடன் புதிய தோற்றத்தை பெற உள்ளது. இந்த ரயில் நிலையங்களின் நவீனமயமாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.10,000 கோடி
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், புது தில்லி, அகமதாபாத் மற்றும் மும்பை சிஎஸ்எம்டி ஆகிய மூன்று முக்கிய ரயில் நிலையங்களை நவீன முறையில் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது.
அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
நேற்று டெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 'புது டெல்லி ரயில்வே நிலையம், அகமதாபாத் ரயில்வே நிலையம், மும்பை ரயில்வே நிலையம் ஆகிய மூன்று முக்கிய ரயில் நிலையங்களை நவீன முறையில் மறுவடிவமைப்பு செய்வதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படுகிறது என தெரிவித்தார்.
199 ரயில் நிலையங்கள்
மேலும் டெல்லி, மும்பை, அகமதாபாத் மட்டுமின்றி 199 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆண்டுக்கு 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் பயணிகள் பயணிக்கும் ரயில் நிலையங்கள் முதல் கட்டமாக பரிசீலிக்கப்பட்டு உள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பயணிகள்
முதல்கட்டமாக டெல்லி, மும்பை, அகமதாபாத் ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என்றும், அதன்பின்னர் இரண்டாம் கட்டமாக10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் ரயில் நிலையங்களின் மறு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் மேலும் கூறினார். எனவே இரண்டாம் கட்ட நவீனமயமாக்கப்படும் பணிகளில் சென்னை, பெஙக்ளூரு, ஐதராபாத் உள்ளிட்ட தென்மாநில ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என தெரிகிறது.
புதுடெல்லி ரயில் நிலையம்
மேலும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, 'புதுடெல்லி ரயில் நிலையத்தை பேருந்துகள், ஆட்டோ மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளுடன் ஒருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.