மாத சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களும் கவனிக்க வேண்டிய முக்கியமான புதிய தொழிலாளர் சட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலாக்கம் செய்ய உள்ளது. இப்புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் ஊழியர்கள் பணியாற்றும் நேரம் அதிகரிக்கும், அதேபோல் சம்பளத்திலும் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாகச் சில ஊழியர்களின் கையில் பெறும் சம்பளத்தின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளது.
பணியாற்றும் நேரம்
புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களின் பணி நேரத்தை தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தற்போது இருக்கும் 9 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கலாம்.
இது அனைத்து நிறுவனத்திற்கும் கட்டாயம் இல்லை, அதேபோல் விருப்பத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படும். மேலும் பணியாற்றும் நேரத்திற்கு ஈடாகச் சம்பளம் அதிகரிக்கப்படும். இந்த முக்கியம் மாற்றம் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.
இந்த மாற்றம் மூலம் வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை என்கிற கட்டமைப்பையும் இந்தியாவில் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தலாம்.
50 சதவீத அடிப்படை சம்பளம்
இப்புதிய தொழிலாளர் சட்டம் மூலம் ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேசிக் பே அதாவது அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும் எனப் புதிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கொடுப்பனவு அளவு
அதேவேளையில் சம்பளம் அல்லாத கொடுப்பனவு போன்ற இதர பிரிவில் மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பெரும்பாலான ஊழியர்களின் சம்பளம் மாறுபட வாய்ப்புகள் அதிகம்.
பிராவிடெண்ட் பண்ட் பணம்
இப்புதிய மாற்றத்தின் மூலம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பிராவிடெண்ட் பண்ட் பணத்தின் அளவு அதிகரிக்கும். அடிப்படை சம்பளத்தில் 12 + 12 = 24% வருங்கால வைப்பு நிதி கணக்கிற்குப் பிடித்தம் செய்து செலுத்தப்படும். இதனால் ஊழியர்கள் பெறும் சம்பள அளவு குறைந்தாலும் பிஎப் பணம் மூலம் ஊழியர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.
கிராஜூவிட்டி பிடித்தம்
இதே கணக்கீட்டில் கிராஜூவிட்டி பணமும் அதிகரிக்கப்படுகிறது, இதுவும் மாத சம்பளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். கிராஜூவிட்டி மற்றும் பிஎப் பிரிவில் அதிகப் பணம் பிடித்தம் செய்யப்படுவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் கையில் பெரும் சம்பளம் குறைந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பெரும் லாபத்தை ஊழியர்கள் அடைவார்கள்.
கிராஜூவிட்டி அதிகரிக்கும்
பொதுவாகக் கிராஜூவிட்டி ஒவ்வொரு வருடச் சேவைக்கும் கடைசியாகக் கொடுக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தின் 15 நாட்களுக்குச் சமமான தொகையாக நிறுவனங்கள் கிராஜ்விட்டியாகக் கொடுக்கும். ஆக அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் போது இந்தக் கிராஜ்விட்டி தொகையும் அதிகரிக்கும். இதற்காக நிறுவனங்கள் பிடித்தம் செய்யும் தொகையும் அதிகரிக்கும்.
ஓவர்டைம் கணக்கீடு
இதேபோல் ஊழியர்கள் 15 முதல் 30 நிமிடம் வரையில் கூடுதலாகப் பணியாற்றினாலும் 30 நிமிடம் ஓவர்டைம் எனக் கருதப்படும். இதன் மூலம் கூடுதலாகப் பணியாற்றும் ஒவ்வொரு தொழிற்சாலை ஊழியர்களும் அதிகப் பலன் அடைவார்கள்.
5 மணிநேரம் வேலை
இதேவேளையில் இப்புதிய தொழிலாளர் சட்டத்தில் ஊழியர்களின் நலனுக்காக 5 மணிநேரத்திற்கு அதிகமாக இடைவெளி இல்லாமல் பணியாற்றக் கூடாது எனத் தீர்க்கமாக உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் ஊழியர்கள் கட்டாயம் 30 நிமிடம் பிரேக் அதாவது இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும் எனச் சட்டமாகவே கொண்டு வரப்பட்டு உள்ளது. இது உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றும் அனைவருக்கும் நன்மை அளிக்கும்.