ஈரான் போர் காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து எல்பிஜி சிலிண்டர் வழங்குவதில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக சிலிண்டர் புக்கிங் கால இடைவெளி நீட்டிக்கப்பட்டது. புதிதாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் இணைப்பு தருவது நிறுத்தி வைக்கப்பட்டது.
ஈரான் போர் சூழல் தற்போது தணிந்திருந்தாலும் எல்பிஜி சிலிண்டர் தொடர்பான கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்பட வில்லை. குறிப்பாக புது கேஸ் இணைப்புகள் தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தி இந்து வெளியிடும் செய்தியின் படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய முக்கிய பெருநகரங்களில் உள்ள எரிவாயு விநியோகஸ்தர்கள் கடந்த மார்ச் மாதம் முதலே வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கான புதிய இணைப்புகள் எதையும் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளன.

ஈரான் போர் காரணமாக கொண்டுவரப்பட்ட பிற கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் கூட, புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக சாதாரண மக்கள் புகார் கூறுகின்றனர். புது கேஸ் இணைப்புக்காக விண்ணப்பம் செய்து பல மாதங்கள் காத்திருப்பதாக கூறுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் தற்போது நிலவும் புவிசார் போர் சூழல் காரணமாக, புதிய எல்பிஜி இணைப்புகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், தடையற்ற அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்வதற்காகவும் ஏற்கனவே உள்ள நுகர்வோருக்கு சிலிண்டர்களை நிரப்பி வழங்குவதற்குமே விநியோகஸ்தர்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் புதிய கேஸ் இணைப்புகள் வழங்குவது மீண்டும் தொடங்கும் என்றும், இது ஒரு தற்காலிக நடவடிக்கையே என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய கேஸ் இணைப்புகளை தராமல் நிறுத்தி வைத்துள்ள நிலையில், புதிதாக கேஸ் இணைப்பு தேவைப்படும் கட்டாயத்தில் இருப்பவர்கள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதாவது தற்காலிக நடவடிக்கையாக 5 கிலோ சிலிண்டர்கள் மற்றும் 10 கிலோ சிலிண்டர்களை பயன்படுத்தி கொள்ளுமாறு விநியோகஸ்தர்கள் பரிந்துரை செய்கின்றனர். சோட்டா சிலிண்டர்கள், மினி சிலிண்டர்கள் என்ற பெயர்களீல் இந்த சிலிண்டர்கள் கிடைக்கின்றன. பொதுமக்கள் விண்ணப்பித்து உடனே இதனை வாங்கி கொள்ளலாம். மீண்டும் கொண்டு சென்று ரீஃபில் செய்து கொள்ளலாம். வழக்கமாக எல்பிஜி சிலிண்டர் போல விண்ணப்பம் செய்தும் புக் செய்தும் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.
புதிதாக விண்ணப்பம் செய்து கேஸ் இணைப்பு கிடைக்க பெறாதவர்கள், இளைஞர்கள், புலம் பெயர்வோர் என பலரும் இந்த வகை மினி சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் மினி சிலிண்டர்கள் விற்பனை அதிகரித்துள்ளதாம்.
இந்தியா தனக்கு தேவையான எல்பிஜி -ஐ வளைகுடா நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கப்பல் போக்குவரத்து தடைபட்டதால் இந்தியாவுக்கு எல்பிஜி வரத்து குறைந்து போயுள்ளது. போருக்கு முன்பு, இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வந்தது. இதில் 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு வரப்பட்டன. இந்த விநியோகத்தில் தடை ஏற்பட்டதை தொடர்ந்து, இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியின் தாக்கத்தை சமாளித்தது.மேலும் அமெரிக்காவிலிருந்து அதிகமாக எல்பிஜி இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications

