ஈரான் போர் காரணமாக இந்தியாவிற்கு எல்பிஜி சப்ளை நின்று போயிருக்கிறது. வளைகுடா நாடுகளில் இருந்து தான் இந்தியா தனக்கு தேவையான பெரும்பான்மையான எல்பிஜி இறக்குமதி செய்து வந்தது. ஆனால் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய ஈரான் போர் இந்தியாவிற்கான எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தையே நிறுத்தி வைத்து இருக்கிறது. அவ்வப்போது ஒன்று இரண்டு கப்பல்களில் எல்பிஜி கொண்டுவரப்பட்டது ஆனால் இந்தியாவின் ஒட்டுமொத்த தேவையும் அது பூர்த்தி செய்யாது.
மத்திய அரசு அமெரிக்கா உள்ளிட்ட மாற்று ஆதாரங்களிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்தாலும் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு ஏற்கனவே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. ஈரான் போர் பதற்றம் இன்னும் தனியாமல் இருப்பதால் மே மாதம் முதல் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் பல அதிரடி மாற்றங்கள் வர இருக்கின்றன.

சிலிண்டர் விலை உயர்கிறதா: ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலைகளை உயர்த்தும். அந்த வகையில் மே ஒன்றாம் தேதியான நாளை சிலிண்டர் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் தான் 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. அந்த வகையில் சென்னையில் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 928.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிகரீதியாக பயன்படுத்த கூடிய 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை ஏப்ரல் மாதத்தில் 196 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு மார்ச் மாதத்திலேயே இரண்டு முறை விலை உயர்வு கண்டது. அந்த வகையில் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தற்போது 2,246.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேற்காசிய போர் சூழல் கொஞ்சம் கூட தணியாமல் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பதால் மே 1இல் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவே சொல்லப்படுகிறது.
சிலிண்டர் புக்கிங் விதிகள் மாற்றம்: தற்போதைக்கு இந்தியாவில் நகர்ப்புறங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 25 நாட்கள் இடைவெளியில் சிலிண்டர் புக்கிங் செய்யலாம். இதுவே கிராமப்புறங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 45 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சிலிண்டர் புக்கிங் செய்ய முடியும். ஈரான் போருக்கு முன்பு 21 நாட்களாக மட்டுமே இது இருந்தது. அனைவருக்கும் சீராக கேஸ் சிலிண்டர் கிடைக்க வேண்டும் என்று நோக்கத்தில் மத்திய அரசு சிலிண்டர் புக்கிங் கால இடைவெளியை அதிகரித்து இருக்கிறது.
ஓடிபி சிலிண்டர் டெலிவரி: சிலிண்டர் முறையான வாடிக்கையாளர்களுக்கு தான் சென்று சேருகிறது என்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் மே மாதம் இருந்து 100% ஓடிபி அடிப்படையிலான சிலிண்டர் டெலிவரி நடைமுறை கொண்டுவரப்பட இருக்கிறது. எனவே சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது வரக்கூடிய மெசேஜில் ஒரு ஓடிபி வரும் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் சமயத்தில் அந்த ஓடிபி கொடுத்தால் மட்டுமே உங்கள் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.
கேஒய்சி: எல்பிஜி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கேஸ் ஏஜென்சியை தொடர்பு கொண்டு கேஒய்சி நடைமுறையை முடித்துக் கொள்வது நல்லது. இல்லை என்றால் சிலிண்டர் கிடைக்காமல் போகலாம்.
எல்பிஜி தட்டுப்பாடு தீர்ந்ததா: இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு தீர்ந்து விட்டதா என்றால் இன்னும் முழுமையாக சரியாகவில்லை. அரசு பொருத்தவரை எல்பிஜி ,பிஎன்ஜி, சிஎன்ஜி சப்ளை எந்த தடையும் இன்றி கிடைக்கிறது என்றே கூறுகிறது. வணிக ரீதியிலான எல்பிஜி மருத்துவமனை, கல்வி வளாகங்கள் என முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. 5 கிலோ எடை கொண்ட மினி சிலிண்டர் வினியோகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

