உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான பெப்சிகோ தனது ஸ்னாக்ஸ் விற்பனை மற்றும் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டு இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதிலும் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என முடிவுடன் உத்தரப் பிரதேசத்தில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மதுரா என்னும் இடத்தில் அம்மாநில அரசின் உதவியுடன் பெற்ற நிலத்தில் சுமார் 814 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் க்ரீன்பீல்டு பிராஜெக்ட்-ஆகத் தொழிற்சாலை அமைக்க உள்ளது பெப்சிகோ. உத்திர பிரதேச மாநில அரசுக்கும் பெப்சிகோ நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இத்தொழிற்சாலை 2021ஆம் ஆண்டின் நடுவில் முழுமையாக இயங்க துவங்கும்.
இத்திட்டத்திற்கு உத்திர பிரதேசம் அரசின் தொழிற்துறை வளர்ச்சி அமைப்பு மதுரா மாநிலத்தின் கோசி பகுதியில் சுமார் 35 ஏக்கர் நிலத்தைப் பெப்சிகோ நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளது.
சிப்ஸ்
இப்புதிய தொழிற்சாலையில் முக்கிய வர்த்தகப் பொருளாக இருக்கப்போவது சிப்ஸ், இதற்காகப் பெப்சிகோ நிறுவனம் உற்பத்திக்குத் தேவையான அனைத்து உருளைக்கிழங்கும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தே பெர்சிகோ கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் இப்பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய வருவாய் ஈட்டும் வழி கிடைக்கும்.
வேலைவாய்ப்பு
இப்புதிய தொழிற்சாலையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனப் பெப்சிகோ தெரிவித்துள்ளது.
இத்திட்டம் குறித்து உத்திர பிரதேசத்தின் தொழிற்துறை வளர்ச்சி அமைச்சர் சதிஷ் மஹானா கூறுகையில், இது முதல்வர் யோகி ஆதித்யநாத்-ன் கனவு தொழிற்சாலை கொள்கை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது எனத் தெரிவித்தார்.
500 கோடி ரூபாய்
மேலும் பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் அகமது அல் ஷே கூறுகையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் 2018 முதலீட்டாளர்கள் மாநாட்டில் இத்திட்டத்தை 500 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்த நிலையில், தற்போது இத்திட்டத்தின் மதிப்பு 814 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
1990 முதல் பெப்சிகோ உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து குளிர்பானங்களைத் தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
திங்கட்கிழமை வெளியான அறிக்கையின் படி தமிழ்நாடு அரசு சுமார் 14 நிறுவனங்கள் உடனான ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 10,055 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் துவங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் 2021ஆம் நிதியாண்டின் முதல் 2 காலாண்டில் தனியார் முதலீடு மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் வாயிலாகச் சுமார் 42 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு 69,712 வேலைவாய்ப்புகள் உருவாகும் அளவிற்குச் சுமார் 31,464 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கு உத்தரவாதம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.