இந்தியா சீனா இடையான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தாலும், இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் வர்த்தகப் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு இந்தியாவில் இயங்கி வந்த சீன நிறுவனங்களின் சேவைக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து சீனா முதலீடுகளுக்குப் பல்வேறு தடைகளும், கட்டுப்பாடுகளும் விதித்தது.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் மத்திய அரசு இந்தியாவில் வரும் அனைத்து அன்னிய முதலீடுகளையும் ஆய்வு செய்யத் திட்டமிட்ட நிலையில், இந்திய நிறுவன சட்டங்கள் கீழ் 10 சதவீதம் பங்கு முதலீடுகளை ஆய்வு செய்யலாம் எனப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் கடந்த 6 மாத காலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக எவ்விதமான அளவீடும் இல்லாமல் அனைத்து அன்னிய முதலீடுகளையும் அதாவது சிறிய அளவிலான முதலீடு அல்லது பங்கு இருப்பு கைப்பற்றும் முதலீடுகளையும் அரசு ஆய்வு மற்றும் ஒப்புதலுக்குப் பின்பு தான் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் "significant beneficial ownership" என்ற அளவீட்டை மத்திய அமைச்சகம் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறது. இந்த அளவீட்டின் மூலம் சீன நிறுவனங்கள் பிற நாடுகளில் இருந்து அதாவது சிங்கப்பூர் மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து செய்யப்படும் முதலீடும் இந்த அளவீட்டில் கீழ் எளிதாகக் கணித்துவிட முடியும் என்பது தான்.
இந்நிலையில் அன்னிய முதலீடுகள் குறித்து மத்திய அரசின் ஆலோசனை மற்றும் முடிவுகளை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கூர்ந்து கவனித்து வருகிறது. குறிப்பாகப் பேடிஎம், சோமேட்டோ, பிக்பேஸ்க்ட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பெருமளவிலான சீன முதலீட்டில் இயங்குவதால் ஸ்டார்ட்அப் முதலீட்டுச் சந்தையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்திய நிறுவனங்கள் மீதான பல சீனா முதலீடுகள் இன்னும் மத்திய அரசு அனுமதி பெறாமல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தோடு ஆலோசனை செய்து அன்னிய முதலீடுகளைத் தணிக்கை செய்வது குறித்த வரையறைகளை இந்த வாரம் நடக்கும் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாகக் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சீனா, சிங்கப்பூர், மொரீஷியஸ், ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து வரும் முதலீடுகள் அனைத்தும் மத்திய அரசின் சிறப்பு வரையறை கீழ் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும். இதில் தைவான் நாட்டில் இருந்து வரும் முதலீடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீனா ராணுவங்களுக்கும் மத்தியில் ஏற்பட்ட வர்த்தகத் தடையின் எதிரொலியாகத் தான் தற்போது மத்திய அரசு சீன முதலீடுகளைக் குறிவைத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இதனால் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மிகப்பெரிய முதலீட்டு ஆதிக்கம் செலுத்தும் டென்சென்ட் மற்றும் அலிபாபா நிறுவனங்களையும், இந்நிறுவனங்களின் முதலீட்டை நம்பி வர்த்தகம் செய்யும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இது பெரிய அளவில் பாதிக்கிறது.