ஆப்கானிஸ்தான் நாட்டை மொத்தமாகத் தாலிபான்கள் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், அந்நாட்டிற்குள் இருக்கும் மொத்த வர்த்தகம், வங்கிகள், நிதி ஆதாரங்கள் தாலிபான்கள் கைகளுக்குச் சென்றுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாகச் சர்வதேச ராணுவ பாதுகாப்பு இருக்கும் காரணத்தாலும், உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு ஆதரவு கொடுத்தக் காரணத்தாலும் சில இந்திய நிறுவனங்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்தது.
இந்தத் திட்டத்தின் தற்போது நிலை என்ன..? இந்திய நிறுவன முதலீடுகளின் நிலை என்ன? இந்திய ஊழியர்களின் நிலை என்ன..?
அமெரிக்க அரசின் முடிவு
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தாலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில முக்கியமான ஒப்பந்தங்களை செய்த பின்பு, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் ராணுவத்தை அமெரிக்கா திரும்பப்பெற்றது. இதன் வாயிலாகத் தாலிபான்கள் ஆப்கான் ராணுவத்தைச் சில நாட்கள் போராட்டத்திலேயே வீழ்த்தி அந்நாட்டை மொத்தமாகக் கைப்பற்றித் தற்போது ஆட்சி அமைக்கும் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளனர் தாலிபான்கள்.
இந்திய நிறுவனங்களின் நிலை
இந்தச் சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் இந்திய நிறுவனங்களுக்கும், ஆப்கானிஸ்தான் உடன் வர்த்தகம் ஒப்பந்தம் செய்துள்ள இந்திய நிறுவனங்கள் தற்போது புதிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டத்தில் உள்ளது. தாலிபான்கள் எந்த அளவிற்கு இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க சூழ்நிலையை அமைத்துத் தருவார்கள் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
2 முக்கிய நிறுவனங்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது சில முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டத்தில் இந்திய நிறுவனங்களான KEC இண்டர்நேஷனல் மற்றும் கல்பட்ரு பவர் டிரான்ஸ்மிஷன் ஆகியவை செயல்பட்டு வருகிறது. தற்போது தாலிபான்கள் அந்நாட்டைக் கைப்பற்றியுள்ள காரணத்தால் இந்நிறுவனங்கள் தத்தம் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து விட்டது. எஞ்சியுள்ள பணிகளை அந்நாட்டு மக்களை வைத்து முடித்துக்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது இந்நிறுவனங்கள்.
சர்வதேச அமைப்புகள் முதலீடு
தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் பல உள்கட்டுமான திட்டங்களுக்குச் சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளின் உதவிகள் உடன் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசு, ஆப்கானிஸ்தான் நாட்டில் இதுவரை சுமார் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது, இந்தச் சூழ்நிலையில் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது மூலம் இந்தியா தனது வர்த்தக வாய்ப்புகள் குறித்துக் கவலை அடைந்து வருகிறது.
KEC இண்டர்நேஷன்ல் நிறுவனம்
மேலும் ஆப்கானிஸ்தான் நிலை குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புதிய ஒப்பந்தங்கள் குறித்த முடிவுகளைக் காத்திருந்து எடுக்க உள்ளோம் என KEC இண்டர்நேஷன்ல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விமல் கெஜிரிவால் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தற்போதைய நிலையில் இந்திய நிறுவனங்களின் திட்டங்களுக்கும், இந்திய ஊழியர்களுக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை.
ஆப்கானிஸ்தானில் இந்திய முதலீடு
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 வருடத்தில் இந்தியா சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் அதிகம் முதலீடு செய்துள்ள வெளிநாடுகளில் இந்தியா முதன்மையாக உள்ளது. ஆனால் தொடர்ந்து பாதுகாப்புப் பிரச்சனை, தாலிபான்கள் பிரச்சனை இருக்கும் காரணத்தால் ஹைதராபாத் BSCPL நிறுவனம் போலப் பல அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.
ஹைதராபாத் BSCPL நிறுவனம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் மிக முக்கியமான திட்டத்தில் BSCPL நிறுவனம் முக்கியப் பங்கு வகித்தது. சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தில் பணியாற்றிய ஹைதராபாத் BSCPL நிறுவனம் 2015ல் அந்நாட்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Wapcos நிறுவனத்தின் சால்மா அணை
மேலும் இந்திய அரசு நிறுவனமான Wapcos ஆப்கானிஸ்தான் நாட்டிலேயே மிகப்பெரிய கட்டுமான திட்டமான சால்மா அணையைக் கட்டி முடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1,775 கோடி ரூபாய் தற்போது இத்திட்டம் அடுத்த கட்டத்திற்குச் செல்லுமா என்ற கேள்வி எழுத்துள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் wapcos நிறுவனம் இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்தியர்களின் நிலை
தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை மொத்தமாகக் கைப்பற்றினாலும் அந்நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டு மக்களுக்கும் எவ்விதமான உயிர் பிரச்சனையும் இதுவரை இல்லை என்பது தற்போது கிடைக்கும் தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், இந்தியர்களைத் தாய் நாட்டிற்குப் பாதுகாப்பாக இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அழைத்து வந்து விட்டனர்.
ஆனால் ராணுவ பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த பணிகளில் இருக்கும் இந்தியர்கள் இன்னமும் ஆப்கானிஸ்தான் நாட்டில் தான் உள்ளனர்.