உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனங்களில் ஒன்றான டிவிட்டர்-ன் சிஇஓ பதவியில் இருந்து இதன் நிறுவனர் ஜாக் டோர்சி வெளியேறிய நிலையில், இந்த முக்கியமான உயர் பதவியை இந்தியரான பாரக் அகர்வால்-க்கு கொடுத்தார். அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தில் மேலும் ஒரு இந்தியர் தலைமை பதவியைப் பெற்றதை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பராக் அகர்வால்-ன் சிஇஓ பதவிக்குக் கிடைக்கும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருக்கும் முன்னணி ஸ்டார்ட்அப் மற்றும் ஐடி சேவை நிறுவனத்திலேயே சிஇஓ-க்கள் பல கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறும் போது டிவிட்டர் போன்ற உலகளாவிய நிறுவனத்தில் சிஇஓ-வாக இருக்கும் பராக் அகர்வால்-ன் சம்பளம் எவ்வளவு இருக்கும்.
பராக் அகர்வால்
பராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாகப் பதவியேற்றியதன் மூலம் அதிகப்படியான சம்பளம், சலுகை, பங்குகள் கிடைக்க வாய்ப்பு நிச்சயம் உள்ளது. இதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரிகள் பட்டியலில் 37 வயதான பராக் அகர்வால் இடம்பெறுவார் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
டிவிட்டர்
பேஸ்புக், ஸ்னாப்சாட், டிக்டாக் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியைக் காட்டிலும் டிவிட்டர் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது சற்று குறைவாகத் தான் உள்ளது. ஆனால் வேறு எந்தத் தளத்திலும் இல்லாத வகையில் டிவிட்டர் தளத்தில் வாடிக்கையாளர்கள் Loyalty மிகவும் அதிகம். இப்படி இருக்கும் நிலையில் டிவிட்டரின் அடிப்படை கொள்கையை எந்த வகையிலும் மாற்றாமல் நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் மிக முக்கியமான பொறுப்பு இளம் சிஇஓ-வான பராக் அகர்வால்-க்கு உண்டு.
சம்பளம்
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் அமர்ந்துள்ள பராக் அகர்வால் தனது வருடாந்திர சம்பளமாக 1 மில்லியன் டாலர் தொகையைப் பெற உள்ளார். இதேபோல் 12.5 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனப் பங்குகளை (restricted stock units) 16 காலாண்டுகளுக்குப் பெற உள்ளார். அதாவது அடுத்த 4 வருடங்களுக்குப் பிரித்து பெற உள்ளார்.
ஜாக் டோர்சி சம்பளம்
இதற்கு முன்பு இப்பதிவியில் இருந்த டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் டோர்சி இந்நிறுவனத்தின் 2.5 சதவீத பங்குகளை வைத்திருந்தாலும், 2018ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு வெறும் 1.4 டாலர் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகிறார்.
பிற இந்திய தலைவர்கள் சம்பளம்
இந்நிலையில் ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை 281 மில்லியன் டாலரும், மைக்ரோசாப்ட் சத்ய நாதெல்லா 43 மில்லியன் டாலரும், பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிகேஷ் அரோரா 128 மில்லியன் டாலரும், அடோப் சாந்தனு நாராயண் 39.2 மில்லியன் டாலரும், ஐபிஎம் அர்விந்த் கிருஷ்ணா 1.5 மில்லியன் டாலர் அளவிலான சம்பளத்தைப் பெறுகின்றனர்.