அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்..? டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா..? 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் Democratic கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்படுவாரா? ஆகிய கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்க அதிபர் தேர்தல் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் இந்தியாவும், இந்திய வர்த்தகங்களும் பல்வேறு பிரச்சனை எதிர்கொண்டது. குறிப்பாக ஐடி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இதனால் ஜோ பிடென் வெற்றி இந்தியாவில் பல நன்மைகளை உருவாக்கிக் கொடுக்கும் எனக் கருத்து நிலவுகிறது.
இந்நிலையில் புதிய அமெரிக்க அதிபர் மூலம் இந்திய வர்த்தகங்கள் எந்த விதமான நன்மைகளையும், பாதிப்புகளையும் அடையும் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
அமெரிக்கா பர்ஸ்ட்
2016ல் ‘America First', ‘Make America Great Again' ஆகிய தேர்தல் பிரச்சார யுக்தி மூலம் பல கோடி அமெரிக்கர்களைக் கவர்ந்து ஆட்சியைப் பிடித்தார் டிர்ம்ப், எங்கும் அமெரிக்கா எதிலும் அமெரிக்கர்கள் என்ற டிரம்ப்-ன் மனநிலை அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பல விதமான மாற்றங்களை இந்த ஆட்சிக் காலத்தில் செய்துள்ளார். குறிப்பாக வேலைவாய்ப்பு சந்தை, ஏற்றுமதி இறக்குமதி போன்ற பலவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள், வரி உயர்வு ஆகியவற்றை விதித்துள்ளார்.
ஜோ பிடென் வெற்றி
இது அனைத்தும் ஜோ பிடென் வெற்றி அடைந்தால் முழுமையாக மாறும் என நம்பிக்கை இந்தியாவில் நிலவுகிறது. இதற்காகவே அமெரிக்கத் தேர்தலை இந்தியாவின் தொழிற்துறை மற்றும் கொள்கை அமைப்பாளர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். ஆனால் டிரம்ப் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் தற்போது உள்ள நிலை மேலும் மோசம் அடையும்.
உற்பத்தி தளம்
இந்நிலையில் 2020 தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி சக்தியாக மாற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளார்.
இதற்கு ஏற்றார் போல் 2019இல் அமெரிக்கா - சீனா இடையே இருந்து 308.8 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கக் கடுமையான வரி விதிப்பு, இறக்குமதி தடை ஆகியவற்றைச் சீன பொருட்கள் மீது விதித்தார். இதனால் இரு நாடுகள் மத்தியில் வர்த்தகப் போர் உருவானது மட்டும் அல்லாமல் இருநாடுகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
வர்த்தகம்
டொனால்டு டிரம்ப் சீனா மட்டுமல்லாமல் அமெரிக்காவுடன் எந்த நாடு அதிகளவிலான வர்த்தகப் பற்றாக்குறை வைத்துள்ளதோ அனைத்து நாடுகளுடனும் அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.
இந்தியா அமெரிக்கா இடையில் வெறும் 28.8 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறை இருந்த நிலையில், பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்கா நட்புறவின் அடையாளமாக விளங்கிய Generalised System of Preferences (GSP) தகுதியை நீக்கியது.
இந்நிலையில் ஜோ பிட்டென் ஆட்சிக்கு வந்தால் இந்தியா மீண்டும் GSP தகுதியைப் பெறும்.
Democrats Vs Republicans
பொதுவாகவே அமெரிக்காவில் Democrats (ஜோ பிடென், பராக் ஒபாமா) வர்த்தக விரிவாக்கத்தைப் பெரிய அளவில் விரும்பமாட்டார்கள், ஆனால் Republicans (டொனால்டு டிரம்ப்) வர்த்தகத்திற்கும், புதிய வர்த்தக வாய்ப்புகளுக்கு ஏதுவானவர்கள் என்ற கருத்து ஒன்று உண்டு.
விசா கட்டுப்பாடுகள்
டிரம்ப் ‘America First', ‘Make America Great Again' ஆகிய கொள்கையை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த காரணத்திற்காக அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கக் கூடாது என ஆரம்பத்தில் இருந்தே விசா மீதான கட்டுப்பாடுகளை அதிகளவில் விதித்து வந்தார். சமீபத்தில் ஹெச்1பி விசாவில் வரும் ஊழியர்களுக்கு அமெரிக்கர்களுக்கு இணையான சம்பளம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
விசா லட்டரி முறை
இதோடு பல லட்சம் இந்தியர்களை அமெரிக்கா சென்று வேலை பார்க்க வாய்ப்பு பெற்றுத் தந்த விசா லாட்டரி முறையைத் தடை செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் டிரம்ப் ஆட்சியைப் பிடித்தால் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் அப்படியே தொடரும், ஆனால் ஜோ பிடென் வெற்றி பெற்றால் அனைத்தும் மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
முதலீடு
டிரம்ப் ஆட்சிக் காலத்தில் பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகக் கூகிள் ரிலையன்ஸ் ஜியோவில் செய்த மிகப்பெரிய முதலீடு.
முதலீட்டுச் சந்தையைப் பொருத்த வரையில், இந்தியா வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் ஸ்டார்ட்அப் சந்தையும், தொழில்நுட்ப முன்னோடியான சந்தையும் உருவாக்க வேண்டும். இப்போது தான் யார் அதிபராக இருந்தாலும் அமெரிக்க முதலீடுகளை ஈர்க்க முடியும்.