வரும் புத்தாண்டில் இருந்து உங்களது செலவினங்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம். ஏன் அப்படின்னு கேட்கிறீங்களா? உங்களது பொதுக் காப்பீட்டின் பிரீமியம் ஜனவரி 1-லிருந்து அதிகரிக்கலாம்.
அதிலும் பொது இன்சூரன்ஸ்களுக்கான பிரீமியம் 10-15% அதிகரிக்கலாம் என்றும் மணிகண்ட்ரோல் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது மறுகாப்பீட்டு விகிதங்களின் அதிகரிப்பு காரணமாக இந்த பிரீமிய உயர்வு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அதென்ன மறுகாப்பீடு என்று கேட்கிறீர்களா? நமது பாதுகாப்பு காரணங்களுக்காக நாம் இன்சூரன்ஸ் செய்கின்றோம், அதே போல இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தங்களது பாதுகாப்பிற்காக இன்சூரன்ஸ் செய்கின்றனர், இதனை ரீஇன்சூரன்ஸ் அல்லது மறுக்காப்பீடு என்று அழைக்கிறோம்.
நாம் எதிர்பாராத சூழ்நிலைகளிலிருந்து நமது உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எப்படி இன்சூரன்ஸ் செய்கின்றோமோ அதே போன்று, காப்பீட்டு நிறுவனங்களும் பல வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு காப்பீட்டு நிறுவனம் மற்றொரு காப்பீட்டு நிறுவனத்திலிருந்து தன்னுடைய இழப்புகளை குறைக்கும் விதமாக ஒரு காப்பீட்டு திட்டத்தை வாங்கினால், இதனை மறுகாப்பீடு என்கிறோம்.
காப்பீட்டு நிறுவனம் மறுகாப்பீட்டு நிறுவனத்திற்கு ப்ரீமியம் கட்டணத்தைச் செலுத்துகிறது. காப்பீட்டு நிறுவனத்தின் சில வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனத்தினால் இழப்பீடு தொகை வழங்க இயலாத பொழுது, மறுகாப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு நிறுவனத்தின் உதவிக்கு வருகின்றது. இதன் மூலம் மறுகாப்பீட்டு நிறுவனம் சில வாடிக்கையாளர்களின் இழப்பீடு தொகையை வழங்குகிறது.
இந்த வகையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதுகாப்பு கருதி செலுத்த வேண்டிய தொகையானது அதிகரித்துள்ளது. இதனால் காப்பீட்டு நிறுவனங்கள் அதை ஈடு செய்ய, வாடிக்கையாளர்களுக்கு பிரிமீயத்தை அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த மறுகாப்பீட்டு ஒப்பந்தங்களின் புதுப்பித்தல் ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொது இன்சூரன்ஸ்களுக்கான பிரீமியமும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
வணிகத்தில் உள்ள அனைத்து அபாயங்களையும் கருத்தில் கொண்டு, கிட்டதட்ட அனைத்து பொதுக் கொள்கைகளும் காப்பீட்டு நிறுவனங்களால் மறுகாப்பீடு செய்யப்படுகின்றன. மேலும் உரிமைக் கோரல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதனால் இன்சூரன்ஸ் விலையானது உள்நாட்டு மற்றும் சர்வதேச காரணிகளால் பாதிக்கப்படுகிறது.
ஏனெனில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மறுகாப்பீடு செய்யும் காப்பீட்டாளர்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் செயல்படுகிறார்கள் என்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலும் அவர்கள் எப்பொழுது அதிக உரிமை கோரல்களுடன் காப்பீடு வழங்கப்படும்போது, இதன் விளைவாக எதிர்காலத்தில் சிறந்த தயாரிப்புகளுக்கு பிரீமியங்கள் இன்னும் அதிகரிக்கலாம்.
குறிப்பாக பொறுப்புக் காப்பீடு (liability insurance), நெருப்பு காப்பீடு (fire insurance), மோட்டார் இன்சூரன்ஸ் (motor insurance) உள்ளிட்ட முக்கிய பாலிசிகளுக்கு, பிரீமிய விகிதம் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்திய மறுகாப்பீட்டாளர் GIC Re இன்சூரன்ஸ் பிரிவில் ஒழுக்கத்தை ஏற்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சில காப்பீட்டாளார்கள் தள்ளுபடி நடைமுறைகளில் தொடர்ந்து ஈடுபவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில நேரங்களில் ஒரு பிரிவில் அதிக உரிமைக் கோரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கான ஒட்டுமொத்த இழப்புகளை அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில் உற்பத்தியை பாதிக்கும் வெள்ள சம்பவங்கள் காரணமாக பயிர் காப்பீடு இழப்புகள் அதிகமாக உள்ளன. இது போன்ற செயல்கள் மேலும் பிரீமிய உயர்வுக்கு வழிவகுக்கும் ஒரு காரணி என்றும் கூறப்படுகிறது.
இதே சில்லறை பிரிவில், மோட்டார் காப்பீட்டு பிரிவில் தாக்கம் அதிகம் இருக்கலாம், ஏனெனில் கட்டாயம் மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இதன் எதிரொலி இருக்கலாம். ஏப்ரல் 2020 முதல் மற்றொரு அதிகரிப்பையும் காணலாம். இதன் காரணமாக மோட்டார் பாலிசிகளுக்கான பிரீமியமும் இன்னும் அதிகரிக்ககூடும்.