இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது உங்கள் வாகனத்தில் பெட்ரோல், டீசல் தீர்ந்துவிட்டால் சுங்கச்சாவடிகளில் இலவசமாக பெட்ரோல், டீசல் கிடைக்கும் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது உண்மையா ? பொய்யா? என கோடிக்கணக்கான வாகன ஓட்டிகள் குழம்பி போயுள்ளனர்.
சமூகவலைதள பயன்பாடுகள் அதிகரித்துவிட்ட இந்த கால கட்டத்தில் அதற்கு நிகராக பொய், போலி செய்திகள், வதந்திகள் உள்ளிட்டவையும் பரவுகின்றன. சாமானிய மக்கள் பலரும் எது உண்மையான செய்தி, எது போலியானது என தெரியாமல் பிரச்சினையில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பழுதாகி நின்றால், அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் இலவசமாக பெட்ரோல் அல்லது டீசல் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களின் பெட்ரோல் அல்லது டீசல் தீர்ந்துவிட்டால், சுங்கச்சாவடிகளில் இலவசமாக எரிபொருள் பெறலாம் என பரவி வரும் தகவல்களில் உண்மையில்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் எந்தவொரு வாகனத்திற்கும் இலவசமாக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என விளக்கம் தந்துள்ளது.
சுங்கச்சாவடி நிர்வாகங்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல் அல்லது டீசல் வழங்குவதில்லை. ஒருவேளை உங்கள் வாகனத்தின் எரிபொருள் தீர்ந்து நடுவழியில் நின்றால், NHAIஇன் அவசரக்காலக் குழுக்கள் உங்களுக்கு உதவ முடியும். அவர்கள் வெளியில் இருந்து எரிபொருள் வாங்கி வரவோ அல்லது வாகனத்தை அருகில் உள்ள இடத்திற்கு இழுத்துச் செல்லவோ உதவலாம். ஆனால், இதற்கான செலவை வாகன உரிமையாளரே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், வாகன ஓட்டிகள் 1033 என்ற தேசிய நெடுஞ்சாலை உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம். விபத்து, வாகனம் பழுது அல்லது பிற அவசர நிலைகளின் போது இந்த எண்ணில் அழைத்து உதவி கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வரும் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்று NHAI அறிவுறுத்தியுள்ளது. சுங்கச்சாவடி தொடர்பான முறையான மற்றும் அதிகாரப்பூர்வமான விதிகளை தெரிந்துகொள்ள NHAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகளை பார்க்குமாறு கூறியுள்ளது. சுங்கச்சாவடிகளில் இலவச எரிபொருள் கிடைக்கும் என்ற வதந்தியை நம்பி யாரும் குழப்பமடைய வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

