நாட்டில் நிலவி வரும் மந்த நிலையானது ஒவ்வொரு துறையையும் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதற்கு எஃப்எம்சிஜி துறை மட்டும் விதிவிலக்கா என்ன?
இதை எதிரொலிக்கும் விதமாக 2019ம் ஆண்டில் எஃப்எம்சிஜி துறையில் வளர்ச்சி மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9.7% ஆக வீழ்ச்சி கண்டுள்ளதாக, எஃப்எம்சிஜி சந்தை ஆராய்ச்சியாளார் நீல்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2018ல் இதன் வளர்ச்சி விகிதம் 13.5% ஆக இருந்துள்ளது.
எஃப்எம்சிஜி துறையின் வளர்ச்சி
கடந்த 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் 13.6% ஆக இருந்த எஃப்எம்சிஜி துறையின் வளர்ச்சி விகிதமானது, நாட்டில் நிலவி மந்த நிலை காரணமாக இரண்டாவது காலாண்டில் 10.3% ஆக வீழ்ச்சி கண்டது. இதே மூன்று காலாண்டில் 7.9% ஆக படு பாதாளத்திற்கே சென்று விட்டது. இதே கடைசி காலாண்டில் இந்த விகிதமானது 7.3% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இதன் சராசரி விகிதம் 9.7 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இரண்டு இலக்கத்தில் வளர்ச்சி
கடந்த 2018ம் ஆண்டில் எஃப்எம்சிஜி துறையின் வளர்ச்சி 15.7% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது இரு மடங்கிற்கும் மேலான வளர்ச்சியாகும். இதே 2018ம் ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 16.2% ஆகவும் இத்துறையில் அபார வளர்ச்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மோசமான ஆண்டு
2019ம் ஆண்டு எஃப்எம்சிஜி துறைக்கு ஒரு கடுமையான ஆண்டாகவே இருந்தது என்று கூறலாம். இதை கடந்த ஆண்டின் இறுதி காலாண்டு உறுதிப் படுத்துவதையும் நாம் காண முடிகிறது. எவ்வாறயினும் 2020ம் ஆண்டில் வளர்ச்சி நிலையானதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும், நீல்சன் குளோபல் கனெக்ட்டிவின் தெற்காசிய மண்டல தலைவர் பிரிசுன் பாசு கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டில் எஃப்எம்சிஜி துறை வளர்ச்சி
நடப்பு ஆண்டை பொறுத்தவரையில் இத்துறையின் வளர்ச்சி 9 - 10% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் 8- 9% வளர்ச்சியையும், இது கடந்த 2019ம் ஆண்டில் டிசம்பர் காலாண்டு வளர்ச்சியான 7.3% விட அதிகமாக இருந்தாலும், நடப்பு ஆண்டில் அடுத்து வரும் மூன்று காலாண்டுகளில் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும் என்றும் நீல்சன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சிக்கு இது தான் காரணம்
பண்டிகை காலங்களில் பொதுவாக தேவை அதிகரிப்பைக் காணும். ஆக கடந்த ஆண்டு அக்டோபரில் அது போன்ற ஒரு மீள் எழுச்சியைக் கண்டது. ஆனால் அது ஒரு மாதத்திற்கு அப்பால் நீடிக்கவில்லை என நீல்சன் சவுத் ஆசியாவின் நித்யா பல்லா கூறியுள்ளார். இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம் தான் என்றும், இது ஒட்டுமொத்த வளர்ச்சியையும் குறைத்தது என்றும் கூறியுள்ளார்.
பணவீக்க விகிதம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் ஐந்தாண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சமான 7.35% தொட்டது. இது இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 6% இலக்கை விட இது அதிகமாகும். மேலும் தற்போது மோசமான நிலை முடிந்து விட்டதா என்று நாங்கள் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கடந்த காலாண்டில் இந்த வீழ்ச்சியானது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஏனெனில் நகர்புற மையங்களைவிட, கிராமப்புற சந்தைகளில் சற்று வேகமாக வளர்ந்துள்ளது.
மீட்பு இருக்கலாம்
நாங்கள் இத்துறையில் வளர்ச்சி படிப்படியாக மீட்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனெனில் ராபி பருவம் நன்றாக இருந்தது. மகசூல் அதிகரித்திருப்பதாலும், அரசு பொருளாதாரத்தை மீட்க எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளும் ஒரு தூண்டுதலாக செயல்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆக எஃப்எம்சிஜி துறை வளர்ச்சியானது படிப்படியாக மீளும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று நீல்சன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சில கவலைகள் உண்டு
இந்த நிலையில் ஒரு சில கவலைகளும் உண்டு. குறிப்பாக பணவீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அது மார்ச் 2020க்குள் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் இதற்கான தூண்டுதல் நடவடிக்கைகள் இருக்கலாம் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆக 2020ம் ஆண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சியின் விகிதம் 9 - 10% ஆக இருக்கலாம் என்று நீல்சன் மதிப்பிட்டுள்ளது.