நிர்மா சோப்பு தூள் இந்தியாவின் மிக பிரபலமான, பல காலமாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரண்டாகும். இது சோப்பு மற்றும் காஸ்மெடிக் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாகும்.
இது நிர்மா லிமிடெட் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் நிறுவனத்தினை வாங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த கையகப்படுத்தல் திட்டத்தில் மதிப்பானது 1650 கோடி ரூபாயாகும். இதுவரையில் குறிப்பிட்ட சில வணிகங்களில் வெற்றிகரமாக கோலேச்சி வந்த நிர்மா, தற்போது நாட்டின் மிகப்பெரிய கண்ணாடி பாட்டில் நிறுவமான ஹிந்துஸ்தான் நேஷனல் கிளாஸினை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பல நிறுவனங்கள் ஆர்வம்
ஆப்பிரிக்காவினை சேர்ந்த பாட்டில் நிறுவனமான மத்வானி குழுமம் மற்றும் ஹிண்ட்வேர் தயாரிப்புகளின் தயாரிப்பாளாராக அறியப்படும் ஏஜிஐ கிரீன்பேக், கொல்கத்தாவினை சேர்ந்த பாட்டில் நிறுவனமும் இந்த பாட்டில் நிறுவனத்தினை கையகப்படுத்த ஆர்வம் காட்டியுள்ளன. அதற்காக திட்டங்ளையும் சமர்பித்துள்ளன.
நிபந்தனையா?
கர்சன்பாய் புரோமோட்டராக உள்ள நிர்மா நிறுவனம், கடன் வழங்கியவர்களுக்கு முன் பணமாக 1625 கோடி ரூபாயும், செயல்பாட்டு கடனாளர்களாக இருக்கும் ஊழியர்களுக்கு 25 கோடி ரூபாயும் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. நிர்மா நிறுவனத்தின் நிபந்தனைகள் ஏலதாரர்களை யோசிக்க வைக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
ஹிந்துஸ்தான் சானிட்டரிவேர்
ஹிந்துஸ்தான் சானிட்டரிவேர் என அழைக்கப்படும் ஏஜிஐ கிரீன்பேக் 1800 கோடி ரூபாயில் ஒரு திட்டத்தினை வழங்கியது. இதில் சுமார் 500 கோடி முன் பணமாகவும், 1200 கோடி ரூபாய் கடன் வழங்குபவர்களுக்கும், 200 கோடி ரூபாய் ஊழியர்களுக்கு செயல்பாட்டுக் கடனாகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்வானி குழுமம்
இதே மத்வானி குழுமம் 1500 கோடி ரூபாயில் ஒரு திட்டத்தினை வழங்கியுள்ளது. இதில் 900 கோடி ரூபாய் முன் பணமாகவும், ஆறு ஆண்டுகளில் கடன் அளிப்பவர்களுக்கு 500 கோடி ரூபாயும், மீதமுள்ள தொகை ஊழியர்கள் மற்றும் செயல்பாட்டு கடனாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்வானி குழுமம் கடன் வழங்குபவர்களுக்கு 10% பங்குகளை வழங்கும் என தெரிவித்துள்ளது.