டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு நெருக்கடியான இந்த நேரத்தில் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான எல்டிசி கேஷ் வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பயணம் செய்து பெறும் கொடுப்பனவை, பயணம் செய்யாமலேயே பணமாக பெறலாம்.
நாட்டில் பரவி வரும் கொரோனா காரணமாக எல்டிசி-யைப் பயன்படுத்த முடியாத ஊழியர்களுக்கு எல்டிசி பண வவுச்சர் திட்டத்தின் மூலம், பணமாக அதை பெற்றுக் கொள்ளலாம். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எல்டிசி கேஸ் வவுச்சர் திட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரம் தொடர்பான பல திட்டங்களை நேற்று அறிவித்தார். அதில் பயணக் கொடுப்பனவு விடுமுறை திட்டத்திற்கான, எல்டிசி கேஸ் வவுச்சர் திட்டத்தை அறிவித்தார். மத்திய அரசின் இந்தத் நடவடிக்கையினால் அரசு ஊழியர்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
பொருளாதாரத்திற்கு பயனளிக்கும்
பணம் கையில் இருக்கும் போது அதை வைத்திருப்பவர் செலவிடுவார். இதன் மூலம் சமூகத்தின் பிற பிரிவினருக்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் பயனளிக்கும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 வருடத்திற்கு கிடைக்கும் கொடுப்பனவில் ஒரு முறை நாட்டின் எந்தப் பகுதிக்கும் பயணம் செய்யலாம். ஒரு முறை தனது சொந்த ஊருக்கு கூட செல்லலாம்.
பயணம் செய்ய முடியாதவருக்கு பணம்
இந்த பயணக் கொடுப்பனவில், ஊழியர்கள் விமானப் பயணம் மற்றும் ரயில் பயணச் செலவைப் பெறுகிறார்கள். கூடுதலாக இதற்காக ஊழியர்களுக்கு 10 நாள் விடுமுறையும் வழங்கப்படுகிறது. ஆக தற்போது நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா பரவல் காரணமாக, எல்டிசியைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஊழியர்களுக்கு பயணக் கொடுப்பனவு பணமாக கொடுக்கப்படும்.
வரி விலக்கு உண்டு
ஊழியர்களின் பதவிக்கு ஏற்ப இந்த பயண கட்டணம் தரப்படும். இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில், இந்த பயண கட்டணத்திற்கான கொடுப்பனவிற்கு முற்றிலும் வரி விலக்கு உண்டு என்பது தான். இந்த தொகையினை மார்ச் 31, 2021-க்கு முன் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படி தான் செலவு செய்ய வேண்டும்
ஊழியர்கள் இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை பெற செலவழிக்க வேண்டும். பயண கொடுப்பனவிற்கு மூன்று மடங்கு அதிகமான அளவிற்கு பொருள் அல்லது சேவையை வாங்க வேண்டும். அதோடு 12% அல்லது அதற்கு மேற்பட்ட ஜிஎஸ்டியை விதிக்கும் சேவை பொருட்களுக்கு பணம் செலவிடப்பட வேண்டும்.
டிஜிட்டல் முறையில் செலவு செய்ய வேண்டும்
மேலும் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர் அல்லது வணிகரிடமிருந்து சேவைகள் அல்லது பொருட்களை வாங்குவது மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சேவைகள் அல்லது பொருட்களுக்கான கட்டணமும் டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட வேண்டும்.
விற்பனை அதிகரிக்கும்
ஓய்ட் குட்ஸ் எனப்படும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மொபைல், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், எலக்ட்ரானிக் வாகனங்கள், டிவி, வாட்டர் கூலர்ஸ், கிரைண்டர் உள்ளிட்டவை இந்த 12% மேலான ஜிஎஸ்டி பட்டியலில் அடங்கும். இதனால் இந்த வகையான பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் என்ற யூகத்தில் தான், டைட்டன், ப்ளூ ஸ்டார், வேர்ல்பூல், வோல்டாஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலையானது 2% வரை ஏற்றத்தில் காணப்படுகின்றது.