நேற்று மாலை முதல் அதிகம் பேசப்பட்டு வரும் யெஸ் பேங்க் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தன் டிவிட்டர் பக்கத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதத்தில் பேசி இருக்கிறார்.
அப்படி ப சிதம்பரம் என்ன கேள்வி எழுப்பினார்..? நிர்மலா சீதாராமன் என்ன பதில் கொடுத்தார் என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம். முதலில் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் சொன்ன விவரங்களில் இருந்து தொடங்குவோம்.
பத்திரிகையாளர் சந்திப்பு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பத்திரிகையாளர் சந்திப்பில், யெஸ் பேங்க் குறித்து பேசினார். அதில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் யெஸ் பேங்கைச் சுத்தப்படுத்தும் வேலை தொடங்கிவிட்டது. கடந்த செப்டம்பர் 2018-லேயே யெஸ் பேங்கின் தலைமையை மாற்றச் சொல்லி ஆர்பிஐ சொன்னதாகச் சொன்னார்.
பணம்
கடந்த செப்டம்பர் 2019-லேயே, யெஸ் பேங்கின் புரோமோட்டார்கள், தங்களின் பங்குகளை விற்று வெளியேறிவிட்டார்கள். அதன் பின் வங்கியை நடத்த பணம் தேவையாக இருந்தது. இந்த பணத்தை பெற பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலன் கொடுக்கவில்லை. கடந்த நவம்பர் 2019-ல் புதிய சி இ ஓ நியமிக்கப்பட்டார். அவர் ஆர்பிஐ உடன் தொடர்ந்து பணியாற்றினார். அப்போதே புதிதாக பணம் வருவது சிரமம் எனத் தெளிவாகத் தெரிந்தது.
மதிப்பீடு
யெஸ் பேங்கின் இந்த பிரச்சனைகளுக்கு என்ன காரணம், யாரால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வந்தது என்பதையும் மதிப்பீடு (Assessment) செய்ய மத்திய ரிசர்வ் வங்கிக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறாராம். அதோடு மத்திய அரசு யெஸ் பேங்க் டெபாசிட்டர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் எனவும் சொல்லி இருக்கிறார்.
மறு சீரமைப்பு
யெஸ் பேங்கின் டெபாசிட்டோ அல்லது கடன்களோ பாதிக்கப்படாது. புதிய இயக்குநர் குழு அமைக்கப்படும். குறிப்பிட்ட 30 நாளுக்குள், யெஸ் பேங்கில் மறு சீரமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். எனவே டெபாசிட்டர்கள் பயப்பட வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இப்போது ப சிதம்பரத்துக்கு நிதி அமைச்சர் கொடுத்த பதிலடிக்குச் செல்வோம்.
ப சிதம்பரம் கேள்வி
இந்த யெஸ் பேங்க் செய்தியைக் குறித்து ப சிதம்பரம் தன் டிவிட்டர் பக்கத்தில் "பாரதிய ஜனதா கட்சி தான் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. இவர்கள் இந்தியாவின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை நிர்வகிக்கும் மற்றும் முறைப்படுத்தும் லட்சணம் தற்போது தெரிந்துவிட்டது" என காட்டமாக பதிவு செய்து இருந்தார்.
கேள்வி 2
மேலும் தொடர்ந்து பதிவிட்டு இருந்த முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் "முதலில் பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி சிக்கலுக்கு உள்ளானது. இப்போது யெஸ் பேங்க் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த அரசுக்கு இதைப் பற்றி ஏதாவது வருத்தம் இருக்கிறதா? அரசு தன் பொறுப்பில் இருந்து விலகி விட முடியுமா? அடுத்து மூன்றாவது வங்கி ஏதாவது இருக்கிறதா?" என கேள்விக் கணைகளைத் தொடுத்து இருந்தார்.
அழுத்தம்
2014-ம் ஆண்டுக்கு முன்பே, இந்தியாவில் அனில் அம்பானி குழுமம், வொடாபோன் குழுமம், ஐ எல் & எஃப் எஸ், எஸ்ஸல் குழுமம் என பலரும் கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்தார்கள் என்பது நினைவு கூறத்தக்கது. அதன் பின் தான் யுனைடேட் வெஸ்டர்ன் பேங்க் இணைப்பைக் குறித்து பேசத் தொடங்கினார்.
யுனைடெட் வெஸ்டர்ன் பேங்க்
"self-appointed competent doctors" (சிதம்பரம்) தான் 2006-ம் ஆண்டு கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருந்த யுனைடெட் வெஸ்டர்ன் பேங்கை கட்டாயப்படுத்தி ஐடிபிஐ வங்கி உடன் இணைத்தார். இன்று வரை ஐடிபிஐ வங்கியின் நிதி நிலை, இந்த இணைப்பால் பிரச்சனைகள் எழுந்து கொண்டே இருக்கிறது என தன் பதிலடியைக் கொடுத்தார் நிர்மலா சீதாராமன்.
5 லட்சம்
எந்த ஒரு நிறுவனமும் சிதைந்துவிடக் கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். அதை விட முக்கியம், வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாப்பது. அதற்குத் தான் டெபாசிட் இன்சூரன்ஸ் கவரேஜ் தொகையை 5 லட்சமாக உயர்த்த பிரதமர் அறிவுறுத்தினார் எனச் சொல்லி ப சிதம்பரத்துக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.