ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன், பட்ஜெட் அறிக்கையைத் தயார் செய்த அதிகாரிகள் இணைந்து அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்த நிகழ்வின் மூலம் பட்ஜெட் தயாரிக்கும் பணி முடிவடைந்து பட்ஜெட் அறிக்கை பிரிண்டிங் செய்யப்படுவதற்கான பணிகள் துவங்குவதை உறுதிப்படுத்தும் நிகழ்வாக இது இருக்கும்.
அந்த வகையில் இந்த வரும் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அச்சம் இருக்கும் காரணத்தால் அறிக்கையைப் பிரிண்டிங் செய்யாமல் டிஜிட்டல் முறையில் மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறாது என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சனிக்கிழமை பட்ஜெட் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பட்ஜெட் குழு அல்வா தயாரித்துள்ளது. இதன் மூலம் பட்ஜெட் தாக்கலுக்கான கவுன்டவுன் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அனைத்து முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டு, பெரிய கடாயில் அல்வா தயாரிக்கப்பட்டுப் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவருக்கும் அளிக்கப்படும்.
இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதியியல் செயலாளரான அஜய் பூஷன் பாண்டே, பொருளாதார விவகாரத்துறை செயலாளர் தருண் பஜாஜ், செலவின செயலாளரான டிவி சோம்நாத், வங்கித்துறை செயலாளர் டெபாஷிஷ் பாண்டா, DIPAM அமைப்பின் செயலாளர் டிகே பாண்டே, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான கேவி சும்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் தான் பட்ஜெட் அறிக்கையைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஏ டீம். இக்குழுவிற்குத் தலைவராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திகழ்கிறார்.