வேலை இல்லை, நுகர்வு இல்லை, ஜிடிபி சரிவு, விலை வாசி உச்சம் என இந்தியப் பொருளாதாரம் பற்றிய சர்ச்சைகள் இப்போதைக்கு ஒயாது போலிருக்கிறது.
கொஞ்சம் ஓய்வதாகத் தெரிந்தாலும், அரசியல்வாதிகள் எதையாவது சொல்லி, மீண்டும் இந்தியப் பொருளாதாரம் தொடர்பான செய்திகளை மீண்டும் தலைப்புச் செய்தியாக்கி விடுகிறார்கள்.
இப்போது லேட்டஸ்டாக நம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு கருத்தைச் சொல்லி, இந்தியப் பொருளாதாரம் பற்றி மீண்டும் எல்லோரையும் பேச வைத்து இருக்கிறார்.
கருத்து
பாராளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தின் போது "இந்திய பொருளாதார சிக்கலில் இல்லை. இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சி இருக்கிறது எனப்தற்கு ஏழு காரணிகள் இருக்கின்றன" எனச் சொல்லி இருக்கிறார். அவ்வளவு தான் மீண்டும் பொருளாதாரத்தை பற்றி நெட்டிசன்கள் தேடித் தேடி போடத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதை பாருங்கள்
இந்தியாவில் முதலீடு செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்து இருக்கின்றன. இந்திய தொழில் துறை உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி இருக்கிறது. இவைகள் எல்லாமே இந்திய பொருளாதாரம் வளர்ச்சியில் இருப்பதற்கான அறிகுறிகள் எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா.
வரலாற்று உச்சம்
அதோடு, இந்தியாவின் அந்நிய செலாவணி (Foreign Reserve) வரலாறு காணாத உச்சத்தில் இருக்கிறது. அதோடு இந்திய பங்குச் சந்தைகளும் நன்றாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. (குறிப்பு: சென்செக்ஸ் தற்போது சுமாராக 41, 250 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது). எனவே இந்தியப் பொருளாதாரம் நன்றாகத் தான் இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்.
4 இன்ஜின்கள்
மத்தியில் ஆளும் பாஜக அரசு, தனியார் முதலீடு, ஏற்றுமதி, தனியார் நுகர்வு மற்றும் பொது மக்கள் நுகர்வு என நான்கு முக்கிய விஷயங்களை இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்ஜின்களாகப் பார்க்கிறார்களாம். இந்த நான்கு விஷயங்களில் தான் அதிக கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.
அரசு செய்திருக்கிறது
மக்கள் நுகர்வை அதிகரிக்கும், மத்திய அரசு, ரபி மற்றும் கரீஃப் போன்ற பயிர்களின் குறைந்தபட்ச அடிப்படை விலையை அதிகரித்து இருக்கிறார்களாம். அதோடு மத்திய அரசின் இந்தப் பற்றாக்குறை காங்கிரஸ் காலத்தில் தான் அதிகமாக இருந்தது என ப சிதம்பரத்தைப் பற்றியும் பேசி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.