கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து விளையாடத் தொடங்கி இருக்கிறது.
இந்தியாவில் தற்போது சுமாராக 492 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு 9 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.
இந்த சிக்கலான நேரத்தில் பொருளாதார ரீதியாக சில மாற்றங்களை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது சொல்லத் தொடங்கி இருக்கிறார். என்ன சொல்லி இருக்கிறார் என்பதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
வருமான வரி மாற்றங்கள்
கடந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு இதுவரை வருமான வரி செலுத்தாதவர்களுக்கான கடைசி தேதி 30 ஜூன் 2020 வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த 31 மார்ச் 2020 தான் 2018 - 19 நிதி ஆண்டுக்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதார் பான் இணைப்பு
மத்திய அரசின் ஆதார் அட்டை உடன், மத்திய அரசின் வருமான வரித் துறையினர் கொடுக்கும் பான் அட்டையை இணைக்க வேண்டிய கடைசி தேதி 31 மார்ச் 2020 ஆக இருந்தது. இப்போது இந்த தேதியை 30 ஜூன் 2020 வரை நீட்டித்து இருக்கிறார்கள்.
வட்டி குறைப்பு
2018 - 19 நிதி ஆண்டுக்கு, வரும் ஜூன் 30-ம் தேதி வரை தாமதமாகச் செலுத்தும் வருமான வரி பேமெண்ட்களுக்கு வசூலிக்கும் வட்டி 9 சதவிகிதம் மட்டுமே வசூலிப்பார்களாம். தற்போது தாமதமாகச் செலுத்தப்படும் பேமெண்ட்களுக்கு 12 சதவிகிதம் வட்டி வசூலித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிடிஎஸ்
அதே போல தாமதமாகச் செலுத்தப்படும் டிடிஎஸ் டெபாசிட் தொகைகளுக்கு 18 % வட்டி வசூலிப்பார்கள். ஆனால் ஜூன் 30, 2020 வரை தாமதமாகச் செலுத்தும் டிடிஎஸ் டெபாசிட்களுக்கு வெறும் 9 % மட்டுமே வசூலிக்க இருக்கிறார்களாம். டிடிஎஸ் தொகையை செலுத்தும் தேதி மாறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
விவாத் சே விஸ்வாஸ்
வருமான வரி தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு ஒரு சுமூக தீர்வு காணும் திட்டம் தான் இந்த விவாத் சே விஸ்வாஸ் திட்டம். இந்த திட்டத்தின் படி 31 மார்ச் 2020-க்குள் வருமான வரியைச் செலுத்திவிட்டு வெளியேறலாம். கூடுதலாக எந்த ஒரு வட்டியோ அல்லது அபராதமோ செலுத்தத் தேவை இல்லை.
தற்போது
ஒருவேளை, 01 ஏப்ரல் 2020க்கு மேல், முன் வந்து வருமான வரி செலுத்தினால், அவர்கள் கூடுதலாக 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். இப்போது இந்த கொரோனா வைரஸால் , விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் 30 ஜூன் 2020 வரை வருமான வரித் தொகையைச் செலுத்தலாம். கூடுதல் 10 % வரி செலுத்தத் தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஜிஎஸ்டி
மார்ச் 2020, ஏப்ரல் 2020, மே 2020 ஆகிய மூன்று மாதங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரிப் படிவங்களை சமர்பிக்க கடைசி தேதி ஜூன் 30, 2020 ஆக நீட்டிக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
5 கோடி டேர்ன் ஓவர்
அதோடு, 5 கோடி ரூபாய்க்கு கீழ் டேர்ன் ஓவர் செய்யும் கம்பெனிகளுக்கு அபராதம் மற்றும் தாமதமா வரிப் படிவங்களை தாக்கல் செய்வதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது எனச் சொல்லி இருக்கிறார். ஆனால் 5 கோடி ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் இருக்கும் கம்பெனிகளுக்கு 9 % வட்டி வசூலிக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications