டெல்லி : மத்தியில் மோடி தலைமையிலான அரசு முதல் முறையாக பதவியேற்றதிலிருந்தே, கருப்பு பண ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு கணக்கில் வராத பணமாக வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டப் பணத்தில், நடப்பு ஆண்டில் இதுவரை 43.22 சதவிகித பணம் 2,000 தாள்களாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது இதற்கு முந்தைய இரண்டு நிதியாண்டுகளிலும் 60 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2018ம் நிதியாண்டில் கணக்கில் வராத பணத்தில் 67.91 சதவிகிதம் நோட்டுகள் 2,000 ரூபாய் தாள்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இது 2019ம் நிதியாண்டில் 65.93 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கருப்பு பணத்தை ஒழிக்க திட்டம்
கருப்புப் பணம், அதிகரித்து வரும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2016-ம் ஆண்டின் நவம்பர் 8ம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாத நோட்டுகளாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் பழைய நோட்டுகளுக்கு மாற்றாக, புதிய வடிவிலான ரூ.500 நோட்டுகளும், ரூ.2,000 நோட்டுகளும் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.
ரூ.2000 தாள்கள் தான் அதிகம்
இந்த நிலையில் உயர் மதிப்புடைய 2,000 ரூபாய் நோட்டுகள் தான் அதிகமாகப் பதுக்கப்படுவதாகவும், இது தவிர அதிகளவிலான கள்ள நோட்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள்தான் புழங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதை நிரூபிக்கும் விதமாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித் துறையிடம் சிக்கும் கணக்கில் வராத பணத்தில் 2,000 ரூபாய் நோட்டுகள்தான் அதிக அளவில் இருப்பதாகக் கூறப்பட்டும் வருகிறது.
பாதிக்கு பாதி கருப்பு பணம்
மேலும் இவ்வாறு வருமான வரி சோதனைகளில் கைப்பற்றப்படும் ரூபாய் நோட்டுகளில் சராசரியாக 50 சதவிகித நோட்டுகள் 2,000 ரூபாய் நோட்டுகளாகத்தான் இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமான வரித்துறையால் கடந்த மூன்று நிதியாண்டுகளில் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மொத்த பணமும் இங்க தான் இருக்கும் போல?
கணக்கில் வராத நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 2000 ரூபாய் நோட்டுகளின் விகிதம் தான் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2017 - 2018ம் நிதியாண்டில் 67.91 சதவிகிதம் 2000 ரூபாய் நோட்டுகளும், இதே 2018 - 2019ம் நிதியாண்டில் 65.93 சதவிகித நோட்டுகளும், நடப்பு ஆண்டில் இதுவரை 43.22 சதவிகித நோட்டுகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பதுக்கல் கொஞ்சம் குறைந்து வருகிறது
ஒரு புறம் கருப்பு பண பதுக்கல் அதிகம் இருப்பதாக கூறப்பட்டாலும், இதில் கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னவெனில் ஆண்டுக்கு ஆண்டு இது குறைந்து வருவதே. இது பிரதமர் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகள் கொஞ்சம் கைகொடுத்துள்ளதாகத் தான் தோன்றுகிறது.