நாட்டில் நிலவி வரும் பொருளாதார சரிவிலிருந்து மீள அரசு தொடர்ந்து முயன்று வந்தாலும், இதற்கெல்லாம் பலனளிக்காமல், இந்திய பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் ஜிடிபி விகிதமானது இரண்டாவது காலாண்டிலும் படு வீழ்ச்சி கண்டது. அதுவும் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த நிலையில் பல பொருளாதார நிபுணர்களும், எதிர்கட்சிகளும், அரசு மெத்தனமாக உள்ளது, அரசின் இந்த நடவடிக்கை போதாது. அதிலும் பொருளாதாரம் தற்போதிருக்கும் நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்த இன்னும் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
ஏன் பொருளாதார நிபுணரும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனருமான ரகுராம் ராஜன், இந்தியா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது என எச்சரித்துள்ளார். இதே முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம், சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் அரசை விமர்ச்சித்து, பொருளாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு இன்னும் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதிலும் கடந்த காலாண்டில் மட்டும் பணப்புழக்கத்தை அதிகரிகப்பதற்காக, பொதுத்துறை வங்கிகள் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிலும் இந்த 5 லட்சம் கோடி ரூபாயானது வெறும் இரண்டு மாதங்களில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த தொகையானது ஒரு நுகர்வு தூண்டுதலை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.
இதே சரக்கு மற்றும் சேவை வரி பற்றி நிதியமைச்சர் கூறுகையில், ஜிஎஸ்டி கவுன்சில் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருந்தாலும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி அப்படி ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. மேலும் இப்படி அடிக்கடி வட்டி விகிதங்களை குறைக்க முடியாது என்றும் கூறிவிட்டது.
நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே 5 முறை வட்டி குறைப்பு செய்துள்ள நிலையில், இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த வட்டி குறைப்பானது இன்று வரை கைகொடுத்ததாக தெரியவில்லை. இனியாவது கைகொடுக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எப்படியோங்க, இனி வரும் காலாண்டிலாவது வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். விலைவாசி குறைய வேண்டும் என்பதே மக்களின் கருத்து.