சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் பழைய வாகனங்களின் மீது பசுமை வரி விதிப்பதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான திட்டத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த திட்டத்தின் முறையான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, இந்த திட்டமுன்வடிவு மாநில அரசுகளின் ஆலோசனைக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு வரி வசூலிக்கப்படும்?
அதெல்லாம் சரி இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் விதிக்கப்படலாம். இதே தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது பசுமை வரி விதிக்கப்படும்.
இந்த விதி அரசு பேருந்துகளுக்கும் பொருந்தும்
பொது போக்குவரத்து வாகனங்களான நகர பேருந்துகள் போன்றவற்றிற்கு குறைந்த அளவில் பசுமை வரி விதிக்கப்படும். எனினும் இந்த பசுமை வரியிலிருந்து மின்சாரம், மாற்று எரிவாயுகளில் இயங்கும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த பசுமை வரியின் மூலம் பெறப்படும் வருவாயை, மாசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு பசுமை வரி அதிகம்
அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் இயங்கும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கும் அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பசுமை வரி திட்டம் அடுத்த 2022 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதுமட்டும் அல்ல அதிகம் மாசடைந்த நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிகப்படியான பசுமை வரி (சாலை வரியில் 50%) விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை பொறுத்து வசூலிக்கப்படும்
இந்த பசுமை வரியானது வாகனத்தின் வகையை பொறுத்து எவ்வளவு தொகை வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வரி விகிதத்தில் விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கும் விதமாக டிராக்டர், ஹார்வெஸ்டார் மற்றும் டில்லர் போன்ற வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பழைய வாகனங்கள் மீதான ஆர்வம் குறையலாம்
எனினும் இதன் மூலம் மக்களிடம் இனி பழைய வாகனங்களை வாங்கும் ஆர்வம் குறையலாம். இதனால் பழைய வாகனங்களின் எண்ணிக்கை குறையும்.புதிய வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இது வழிவகுக்கும். இதனால் சுற்றுசூழலும் மாசுபடுவது குறையும். கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும்.


Click it and Unblock the Notifications