இந்தியாவின் பெரு நகரங்களில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலால் பல நிறுவனங்கள் வேறு ஊருக்கு செல்லும் நிலைகூட உண்டாகி இருக்கிறது. வேலைக்கு செல்வோரும் வாழ்நாளில் பல மணி நேரம் இப்படி டிராபிக்கிலேயே செல்கிறது என வேதனைப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணப்பட வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நமது நகரங்களில் போக்குவரத்தை எளிதாக்க நவீன போக்குவரத்து வசதிகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பறக்கும் பேருந்துகள் விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்.

லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி இந்தியாவின் போக்குவரத்து சேவைகளை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பறக்கும் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார். ஆனால் இது எந்த வகையான வாகனமாக இருக்கும் என அவர் குறிப்பிடவில்லை. பொதுவாக பறக்கும் பேருந்து என அவர் குறிப்பிடுவது பாட் டாக்ஸிகள் (Aerial Pod Taxis) அல்லது உயரத்தில் பொருத்தப்பட்ட தண்டவாளங்களில் இயங்கும் மின்சார வாகனங்கள் (sky bus) ஆக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதற்கான தண்டவாளங்கள் சாலைகளுக்கு மேலே இருப்பதால், போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக செல்ல முடியும். மேலும் இந்த பேருந்துகள் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடியவையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இவ்வகை பேருந்துகளின் மிக முக்கியமான அம்சம் அதன் சார்ஜிங் திறன். 30 முதல் 40 வினாடிகளில் சார்ஜ் செய்யும் வகையில் Flash charging system கொண்டதாக இருக்கும். ஏசி, வசதியான இருக்கைகள் மற்றும் லேப்டாப் வைக்க தனி இடம் போன்றவை இருக்கும் என சொல்லப்படுகிறது.
மெட்ரோவும் , பேருந்தும் இணைந்து ஒரு சேவை வழங்கப்பட்டால் எப்படி இருக்குமோ அந்த மாதிரியான சேவையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்தியாவில் பொது போக்குவரத்துக்கு அதிகமாக டீசல் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். ஈரான் போர் உள்ளிட்டவை இதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இதனால் மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. டீசல் பேருந்துகளை விட மின்சார பேருந்துகளை இயக்குவது மிகவும் சிக்கனமானது. எனவே வருங்காலங்களில் இந்தியா இத்தகைய வாகனங்களுக்கு மாறிவிட்டால் பெட்ரோல், டீசல் சார்பு நிலையும் குறையும்.
ஆனால் நிதின் கட்கரி குறிப்பிடுவதை போல இது மிக எளிதானது இல்லை. இதற்கான கட்டமைப்புகள், தொழில்நுட்பங்கள் நம் நகரங்களில் கொண்டு வருவது அத்தனை எளிதல்ல ஆனாலும் இவரது அறிவிப்பு வருங்கால மாடர்ன் போக்குவரத்து வசதிக்கான ஒரு ஆரம்பபுள்ளி தான்.


Click it and Unblock the Notifications

