தமிழக பட்ஜெட்டில் நகைக்கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருந்தது. இதனை பற்றிய அறிவிப்பு இன்று வரலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
ஆனால் சற்றே ஏமாற்றம் அளிக்கும் விதமாக அப்படி ஏதும் வரவில்லை. எனினும் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இதில் பல குளறுபடிகள் உள்ளன.
அதனை ஆய்வு செய்து பிறகு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது சற்று ஆறுதல் கொடுக்கும் விஷயமாக உள்ளது.
முந்தைய அரசின் பயிர்க் கடன் தள்ளுபடி
கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக் கடன்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கான கடனை தள்ளுபடி செய்வது அரசின் முன்னுரிமையாக உள்ளது. எனினும் முந்தைய அரசு தேர்தலுக்கு முன்பு பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இதன் மொத்த மதிப்பு 12,110.74 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது.
பல்வேறு குளறுபடிகள்
அரசு ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த நிலையில், இது நெருக்கடியான அறிவிப்பாக வந்தது. எனினும் இந்த திட்டத்தினை பற்றி ஆராய்ந்தபோது பல குளறுபடிகள் உள்ளது தெரிய வந்துள்ளது. சில மாவட்டங்களில் இந்த திட்டத்திற்கு முன்பே சந்தேகப்படும் அளவிற்கு அதிகளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
முழுமையாக ஆராய்ந்து செய்யப்படும்
விவசாய நகைக் கடனை பொறுத்தவரையில் ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம், தூய்மை சரியாக கணக்கிடப்படவில்லை. ஆக இந்த தள்ளுபடி தற்போது அனுமதிக்கப்படும் பட்சத்தில், பலரும் பலனை பெறும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இதனை பற்றி ஆராய்ந்து இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
உண்மை நிலவரம் என்ன?
ஆக தற்போது இது குறித்து அறிவிக்கப்படாவிட்டாலும், விரைவில் இது குறித்து உண்மை நிலை அறியப்பட்டு அறிவிக்கப்படும். இதனால் சரியான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு பலன் அடைவர்.
மொத்தத்தில் இன்று இல்லாவிட்டாலும் விரைவில் சரியான பயனாளிகளுக்கு தள்ளுபடிகள் வரலாம் என்பது மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கை
சட்டமன்றத் தேர்தலில்போது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
இதனிடையே தேர்தலுக்கு முன்பே கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட்ட விவசாய கடன், விவசாய நகைக் கடன், தள்ளுபடி செய்வதாக அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
கடன் இல்லா சான்று வழங்கல்
இதனையடுத்து அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் விவசாயிகளுக்கு கடன் இல்லா சான்று வழங்கியது. எனினும் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் விவசாயிகள் அடமானமாக வைத்த நகைகளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் திரும்ப அளிக்காமல் அலைக்கழித்து வருவதாக புகார்கள் எழுந்தன. அந்த சமயத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அண்மையில் கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.