கொரோனா வைரஸ் உலகத்தை ஆக்கிரமித்த பின், மத்திய ரிசர்வ் வங்கி நடத்தும் முதல் இயக்குநர் குழு கூட்டம் இன்று நடந்தது.
இந்த மத்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தை, ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமை தாங்கி நடத்தினார். மொத்த கூட்டமும் வீடியோ கான்ஃபிரன்சிங் வழியாகவே நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில், ஏற்கனவே கொடுத்து இருக்கும் கடன்களை மறு சீரமைப்பது பற்றி எதையாவது பேசுவார்கள், கடன் வாங்கியவர்களுக்கு ஏதாவது நன்மை இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தொழில் துறையினர்கள் தொடங்கி, தனி நபர்கள் வரை பலரும் இதை ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.
ஏற்கனவே கடன் தவணைகளைச் திருப்பிச் செலுத்துவதை ஆறு மாதங்கள் வரை ஒத்திப் போட மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்து இருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
ஆனால், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, மத்திய அரசு அறிவித்த கடுமையான லாக் டவுனால், வியாபாரமே நடக்கவில்லை. சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு கூட, வேலை பறி போனது. எனவே கடன் தவனைகளை ஒத்தி வைக்க அனுமதித்தது எல்லாம் போதாது என்பது போல, கடன் மறு சீரமைப்பை பல தரப்பினர்களும் பெரிதும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றமே விடையாகக் கிடைத்து இருக்கிறது. கடன் மறு சீரமைப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இந்த மத்திய ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலவரம் மற்றும் கொரோனா வைரஸால் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பொருளாதார தாக்கங்களைப் பற்றியும் விரிவாகப் பேசி இருக்கிறார்களாம்.
இந்தியாவின் நிதி ஆண்டு எப்படி 01 ஏப்ரல் தொடங்கி 31 மார்ச் வரை இருக்கிறதோ, அதே போல மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி ஆண்டு 01 ஜூலை தொடங்கி 30 ஜூன் வரை இருக்கும்.
தற்போது நடந்து கொண்டு இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி நிதி ஆண்டில், என்ன எல்லாம் ஆர்பிஐ செய்தது, அடுத்த ஆர்பிஐ நிதி ஆண்டில், ஆர்பிஐயின் பட்ஜெட் என்ன என பல விஷயங்களை விவாதித்து இருக்கிறார்களாம்.