தொலை தொடர்பு நிறுவனங்கள் தனியார் இடத்தில் கேபிள் பதிக்கும்போதோ அல்லது மொபைல் டவர் அமைக்கும்போதோ, குறிப்பிட்ட தனியாரிடம் மட்டும் அனுமதி வாங்கினால் மட்டும் போதாது.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலை இதுவரை இருந்தது. இந்த நிலையில் இந்த விதிகள் தற்போது திருத்தபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய விதிகளின்படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேபிள் பதிப்பதற்கோ, தனியார் சொத்துக்களில் மொபைல் டவர் அமைப்பதற்கோ இனி எந்த அதிகாரிகளிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை என்றும் சம்பந்தப்பட்ட தனியாரிடம் மட்டும் அனுமதி வாங்கினால் போதும் என்றும் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
புதிய விதிகள்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய பணிகளுக்காக கேபிள்கள் பதிப்பதற்கும், தனியார் சொத்துக்களுக்கு மேல் மொபைல் டவர்கள் அல்லது கம்பங்களை வைப்பதற்கும் இனி அதிகாரிகளிடம் இருந்து எந்த ஒப்புதலும் தேவையில்லை என விதிகள் திருத்தப்பட்டுள்ளது.
5G சேவைகளை எளிதாக்க
இதன்படி சிறிய மொபைல் ஆண்டெனாக்களை நிறுவுவதற்கும், மின்சார கம்பங்கள், கால் ஓவர் பிரிட்ஜ்கள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கான விதிகளை சமீபத்தில் அரசு அறிவித்தது. தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் குறிப்பாக 5G சேவைகளை எளிதாக்குவதற்கு இந்த புதிய விதிகள் பயன்படும் என தெரிகிறது.
அனுமதி தேவையில்லை
இதுகுறித்து ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியான அறிவிப்பில், 'எந்தவொரு தனியார் சொத்தின் மீதும், நிலத்தின் மீதும் உள்கட்டமைப்பை நிறுவ நிலத்தின் உரிமையாளர் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தால் போதும் என்றும், உரிய அதிகாரியிடம் இருந்து எந்த அனுமதியும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
ஆனால் அதே நேரத்தில் திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒரு தனியார் கட்டிடம் அல்லது கட்டமைப்பின் மீது மொபைல் டவர் அமைப்பதற்கு முன், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமாக, உரிய அதிகாரிக்கு ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் நகல்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கு, மொபைல் டவர் அமைக்க முன்மொழியப்பட்ட கட்டிடத்தின் விவரங்கள், உரிய அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட பொறியாளரின் சான்றிதழின் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி சேவைகள்
இந்த புதிய அறிவிப்பால் 5ஜி சேவைக்காக மொபைல் டவர் அமைக்கும் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறும் என்றும், ஒவ்வொரு முறையும் அதிகாரிகளிடம் சென்று அனுமதி பெற தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.