உலகின் பல நாடுகளில் வேலை வாய்ப்பு இல்லாமல் பலர் திண்டாடி வரும் நிலையில் ஹோட்டல் துறையில் மட்டும் வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடி வரும் தகவல் கிடைத்துள்ளது.
உலகின் பல முன்னணி ஹோட்டல்களில் முன் அனுபவம் இல்லாதவர்களை கூட வேலைக்கு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்அனுபவம் வேண்டாம், ரெஸ்யூம் கூட வேண்டாம், 24 மணி நேரத்தில் வேலைக்கு சேரலாம் என்ற விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
வேலைக்கு ஆள் இல்லை
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் வேலைக்கு ஆள் கிடைக்காமல் உலகின் முன்னணி ஹோட்டல்கள் திண்டாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
அனுபவம் இல்லா ஊழியர்கள்
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் முக்கிய தொழிலான சுற்றுலாத்துறை தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை அடுத்து அங்கு உள்ள ஹோட்டல் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதற்கு தேவையான ஊழியர்கள் இல்லாததால் ஐரோப்பாவைச் சேர்ந்த பெரும்பாலான ஹோட்டல் நிறுவனங்கள் அனுபவம் இல்லாதவர்கள்கூட வேலைக்கு எடுக்க தயாராகி உள்ளது.
பயிற்சி கொடுத்து வேலை
அது மட்டுமின்றி புதிய ஊழியர்களுக்கு தங்குமிடம், அதிக சம்பளம், போனஸ் உள்பட பல்வேறு வசதிகளையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர அனுபவம் மற்றும் ரெஸ்யூம் ஆகியவை முதலில் கவனிக்கப்படும். ஆனால் இப்போது ரெஸ்யூம் வேண்டாம், அனுபவம் வேண்டாம் 24 மணி நேரத்தில் உடனடியாக வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம், நாங்களே பயிற்சி கொடுத்து வேலையும் தருகிறோம் என்ற நிலைக்கு உலகின் முன்னணி ஹோட்டல்கள் இறங்கி வந்துள்ளது.
அதிக சலுகைகள்
இதற்கு காரணம் ஹோட்டல் பணிகளில் சேருவதற்கு ஆட்கள் கிடைக்காததால் என்று பிரபல ஹோட்டல்களின் நிர்வாகிகள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் ஹோட்டல் துறையில் வேலை பார்த்த பலர் வேறு துறைக்கு வேலைக்கு சென்று விட்டனர். அதுமட்டுமின்றி ஒருசில நாடுகளில் ஹோட்டல் தொழிலாளர்களுக்கும் மூன்று வேலை உணவு, அதிக சம்பளம், போனஸ் உள்பட பல சலுகைகள் பெறுவதால் அந்த நாடுகளுக்கு பலர் சென்றுவிட்டனர். இதன் காரணமாக ஹோட்டல் துறைக்கு வேலை ஆட்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
அக்கார் ஹோட்டல்
ஐரோப்பாவின் மிகப்பெரிய ஓட்டல் நிறுவனமான அக்கார் ஹோட்டல் நிறுவனம் தற்போது அனுபவம் உள்ளவர்கள் கிடைக்காததால் அனுபவமில்லாத ஊழியர்களை வேலைக்கு எடுத்து வருவதாக கூறியுள்ளது. தினமும் 6 மணி நேரம் அவர்களுக்கு பயிற்சி அளித்து அதன் பின் இரண்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறது.
மாணவர்கள்
பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தற்போது நேர்காணலுக்கு வருவதாகவும் அவர்களை வேலைக்கு எடுத்து வருவதாகவும் அக்கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கைநிறைய சம்பளம் மற்றும் போனஸ் உள்பட பல்வேறு சலுகைகளை அக்கார் வாரி வழங்கி வருகிறது.
2 லட்சம் ஊழியர்கள் பற்றாக்குறை
தேசிய விருந்தோம்பல் சங்கங்களின் தகவலின்படி, ஸ்பெயினின் கேட்டரிங் துறையில் 2,00,000 தொழிலாளர்கள் குறைவாக உள்ளனர் என்றும், போர்த்துகீசிய ஹோட்டல்களில் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய குறைந்தது 15,000 பேர் தேவைப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.