இந்த நொடி , நாம் நிம்மதியாக நம் வீட்டில் உட்கார்ந்து ஏதோ ஒரு வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த நிம்மதிக்கும் சுதந்திரத்துக்கும் மிக முக்கிய காரணம், பல லட்சம் ராணுவ வீரர்களின் தியாகம் தான். நடுங்கும் குளிர், பனி, மழை, புயல், வெள்ளம் என எதையும் நம் ராணுவ வீரர்கள் பார்ப்பதில்லை.
அப்படி நமக்காக எல்லையில் நிற்கும் ராணுவத்தினர்களை, கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சீனர்கள் தாக்கியது, நம்மை உச்ச கட்ட கோபம் அடையச் செய்தது.
வீர மரணம்
நம்மையும், நம் நாட்டையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்களில் 20 பேர், சீனர்களின் தாக்குதில் வீர மரணம் அடைந்தார்கள். இது நம்மை மேலும் சீனா மீது வெறுப்படையச் செய்தது. இதன் விளைவாக சீனவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சீன பொருட்களை புறக்கணிப்பது என பலரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
மத்திய அரசு
மக்களின் மன நிலையை பிரபதிபலிக்கும் விதத்தில், மத்திய அரசு, சீன கம்பெனிகளுக்கு நெடுஞ்சாலைத் திட்டங்கள் வழங்கப்படாது என்றார்கள். அதே போல, சீனாவிடம் இருந்து மின்சார உபகரணங்கள் இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்க முடியாது என்றார்கள். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் மின் சாதனங்கள் மீது 20 % கூடுதல் வரி விதிக்க ஆலோசிப்பதாகவும் சொன்னது மத்திய அரசு. எல்லாவற்றையும் விட சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்து அதிரடி காட்டினார்கள்.
தமிழக கம்பெனி
இப்படி சீனாவுக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒரு தமிழக கம்பெனி ஒரு அதிரடி முடிவைச் சொல்லி இருக்கிறது. அந்த கம்பெனி என்ன முடிவைச் சொல்லி இருக்கிறது என தெரிந்து கொள்வதற்கு முன், அந்த கம்பெனி பற்றிய விவரங்களை முதலில் பார்த்துவிடுவோம். அந்த கம்பெனியின் பெயர் டிடிகே ப்ரஸ்டீஜ்.
கம்பெனி விவரங்கள்
இந்த டிடிகே ப்ரஸ்டீஜ் கம்பெனி, சமையலறை மற்றும் வீட்டுக்குத் தேவையான சாதனங்களைத் தயாரிக்கும் கம்பெனி. சமையலுக்கு பயன்படுத்தும் குக்கரைத் தயாரிக்கும் நிறுவனமாகத் தான் சென்னையில் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று மெல்ல வளர்ந்து நான் ஸ்டிக் கடாய், பல ரக குக்கர், Air fryer, கேஸ் ஸ்டவ், மைக்ரோவேவ் அவன்... என பல பொருட்களைத் தயாரித்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அதிரடி முடிவு
இந்த டிடிகே ப்ரஸ்டீஜ் கம்பெனி, வரும் செப்டம்பர் 2020 மாதத்துப் பிறகு, சீனாவில் இருந்து finished products-களை வாங்கப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். இது என்ன திடீரென ஒரு கம்பெனி சீனாவிடம் இருந்து பொருட்களை வாங்க மாட்டேன் என்கிறார்களே..? என்று கேட்கிறீர்களா. அதற்கும் கம்பெனி தரப்பில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.
டிடிகே ப்ரஸ்டீஜ் தரப்பு
"ஒரு பிராண்டாக, இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புகள், பண்பாடு, கலாச்சாரங்களை பெருமையாக நினைக்கிறோம். நாங்கள் சீனாவைச் சார்ந்து இருப்பதை கடந்த சில ஆண்டுகளாகவே குறைத்து வருகிறோம். டோக்லம் (Doklam) பகுதியில் பிரச்சனை ஏற்பட்ட காலத்தில் இருந்து சீனாவைச் சார்ந்து இருப்பதை குறைத்து வருகிறோம்" எனச் சொல்லி இருக்கிறார்கள்.
கல்வான் பள்ளாத்தாக்கு
"தற்போது நடந்த இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை தான், எங்களை சீனாவிடம் இருந்து finished products-களை இறக்குமதி செய்வதை நிறுத்தும் கடுமையான முடிவை நோக்கி நகர்த்தியது. சீனாவில் இருந்து எந்த ஒரு finished products -ஐயும் இறக்குமதி செய்யப் போவதில்லை என முடிவு செய்து இருக்கிறோம். அதோடு உள் நாட்டிலேயே தேவையான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் சூழலை மேம்படுத்த கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறோம்" எனச் சொல்லி இருக்கிறார் டிடிகே ப்ரஸ்டீஜ் கம்பெனியின் எம் டி சந்துரு.
10 % தான் சீனா
தற்போது டிடிகே ப்ரஸ்டீஜ் கம்பெனிக்குத் தேவையான பொருட்களில் 10 % பொருட்களைத் தான் சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறார்களாம். ஏற்கனவே கடந்த சில வருடங்களாக லோக்களிலேயே உற்பத்தியை அதிகரித்து இருக்கிறார்களாம். சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் finished products-களை கணிசமாக குறைத்து, உள்நாட்டிலேயே வாங்கிக் கொள்ள இருப்பதாகவும் சொல்கிறது கம்பெனியின் ஸ்டேட்மெண்ட்.
சீனா தவிர மற்ற நாடுகள்
டிடிகே ப்ரஸ்டீஜ் கம்பெனிக்குத் தேவையான பெரும்பாலான பொருட்களை உள்நாட்டிலேயே வாங்கிக் கொலள்வோம். ஒருவேளை உள் நாட்டில் கிடைக்கவில்லை என்றால், சினாவைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்வோம் எனவும் தெளிவு படுத்தி இருக்கிறது டிடிகே ப்ரஸ்டீஜ் கம்பெனி. டிடிகே ப்ரஸ்டீஜின் நாட்டுப் பற்றுக்கு ஒரு ராயல் சல்யூட்.