உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எப்போதும் அமெரிக்கர்கள் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் சமீப காலமாகப் பிற நாட்டவர்களும் அதிகளவில் நுழைந்துள்ளனர்.
இதில் முக்கியமாகக் கடந்த 2 வருடமாகப் போர்ப்ஸ் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மொத்த கதையும் மாறியுள்ளது.
இதன் மூலம் டாப் 10 பட்டியலில் ஒரு இந்தியர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம் அதானி
125 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 3வது பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானி ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்பு 61.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 17வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
முகேஷ் அம்பானி
இதேபோல் 7 முதல் 9 வது இடங்களில் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 82.7 பில்லியன் டாலர் உடன் 12வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தியாவில் எந்த அளவுக்கு ஏழை மக்கள் பாதிக்கப்பட்டார்களோ அதே அளவுக்குப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு வியக்க வைக்கும் அளவிற்கு உயர்ந்தது.அதிலும் குறிப்பாக அல்டரா ரிச் மக்களின் சொத்து மதிப்பு, வர்த்தகம், வருமானம் என அனைத்தும் உயர்ந்தது. இதை விடப் பல மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்தவர்கள் தான் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்.
முகேஷ் அம்பானி, கௌதம் அதானி
கொரோனா தொற்றுக்குப் பின்பும் இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோரின் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தில் அதிகப்படியான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுப் பல துறையில் வர்த்தகம் விரிவாக்கம் செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களை வாங்கிக் குவித்தனர்.
சொத்து மதிப்பு
இந்தப் பயணத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் அதானி சொத்து மதிப்பு வேகமாக உயர துவங்கியது.
போட்டி
ஒரு கட்டத்தில் முகேஷ் அம்பானியை விட அதிகச் சொத்து மதிப்புக் கொண்ட கௌதம் அதானி சொத்து மதிப்பு 125 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து உலகின் 3வது பெரிய பணக்காரராக உயர்ந்தார், இதேவேளையில் முகேஷ் அம்பானி 6 வது இடத்திற்கு வரையில் முன்னேறினார்.
வட்டி விகித உயர்வு
2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்ந்து வந்த காரணத்தால் வர்த்தகம், முதலீடுகள் அனைத்தும் குறைந்தது. இதனால் சொத்து மதிப்பு உயர்வில் மந்தநிலை உருவானதில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை
ஆனால் ஜனவரி 24 ஆம் தேதி அமெரிக்க ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அதானி குழுமம் குறித்து வெளியிட்ட கணக்கியல் முறைகேடுகள், நிதி பரிமாற்றத்தில் இருக்கும் சந்தேகம், கௌதம் அதானி சகோதரர் வினோத் அதானிக்கு 38க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் உடனான தொடர்பு, அதானி குழுமம் - வினோத் அதானி - சீன நாட்டவர் Chang Chung Ling உடன் தொடர்பு குறித்துக் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்ட நாளில் இருந்து அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
வெறும் 7 நாள்
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை வெளியிட்ட பின் வெறும் 7 நாள் வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளது.
இதேபோல் கௌதம் அதானி தனது மொத்த சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலரை இழந்து தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
கௌதம் அதானி வீழ்ச்சி
வெறும் 1 வாரத்தில் கௌதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 17வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார். இதற்கு முதலும் முக்கியக் காரணம் ஹிண்டன்பர்க் அறிக்கை.