ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. போருக்கு முன்னர் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலராக தான் இருந்தது அது தற்போது 120 டாலராக இருக்கிறது.
இந்தியாவை சேர்ந்த எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கி பெட்ரோல் டீசலாக சுத்திகரித்து மக்களுக்கு விற்பனை செய்கின்றன. வழக்கமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும்போது பெட்ரோல் டீசல் விலையும் உயரும். ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் , ஹெச்பி உள்ளிட்டவை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை.

பிரீமியம் பெட்ரோல் விலையை மட்டும் லேசாக உயர்த்தின. அதே வேளையில் நயாரா எனர்ஜி, ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தின. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் நேரடியாக சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் எண்ணெய் நிறுவனங்கள் மக்கள் மீது இந்த சுமையை திணிக்காமல் இருக்கின்றன. அதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசும் பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை குறைத்து நிவாரணம் வழங்கியது.
இருந்தாலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் டீசல் விற்பனையிலும் 20 ரூபாய்க்கு மேல் நஷ்டம் வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது தமிழ்நாடு ,மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலைகள் பெருமளவு உயரும் என தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான kotak institutional equities நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவு உயரும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை 120 டாலர் என்பதை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் இந்த நிறுவனம் தற்போது பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் இருக்கின்றன என கூறுகிறது.
நஷ்டத்தை குறைக்க விலை உயர்வு கட்டாயமாகிவிட்டதாக தெரிவித்திருக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 25 லிருந்து 28 ரூபாய் வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் விலை உயர்ந்தால் அத்துடன் அது நின்று விடாது. பேருந்து மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணம் உயரும் பல்வேறு பொருட்களின் போக்குவரத்து செலவுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருப்பதால் நாம் அன்றாட பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருட்களின் விலைகளும் உயரும்.
ஆனால் மத்திய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தும் எந்த ஒரு ஆலோசனையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் சில செய்திகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக வரக்கூடிய தகவலில் உண்மை கிடையாது இது போன்ற தகவல்கள் மக்களிடையே தேவையில்லாத பதற்றங்களை உண்டாக்குகின்றன , மத்திய அரசிடம் தற்போதைக்கு அப்படி எந்த ஒரு பரிந்துரையும் ஆலோசனையும் இல்லை என தெரிவித்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு மக்களை பாதிக்க கூடாது என்பதற்காக மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நிதிச் சுமையை தங்கள் மீது போட்டுக் கொண்டு வருகின்றன என அதில் விளக்கம் தரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

