இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை மந்த நிலையில் இருக்கிறது. சர்வதேச பொருளாதார சூழல், ஐடி மந்த நிலை, பணிநீக்கங்கள் ஆகியவற்றை தாண்டி பெரு நகரங்கள் அனைத்திலுமே வீடுகளின் விலை என்பது பல மடங்கு உயர்ந்து இருக்கிறது.
சென்னை, பெங்களூரு ,மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நகரங்களில் எல்லாம் சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வேண்டும் என்றால் கூட 1.5 கோடி ரூபாய்க்கு மேல் வேண்டும் என்ற நிலை உண்டாகி விட்டது . இதன் காரணமாக பல நகரங்களிலும் வீடுகள் கட்டப்பட்டு விற்பனையாகாமல் இருக்கின்றன. இப்படி வீடுகள் விற்பனையாகாமல் இருந்தாலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வரக்கூடிய லாபம் கொஞ்சம் கூட குறையவில்லை.

இந்தியாவில் மும்பை ,டெல்லி ,பெங்களூரு ,புனே ,சென்னை, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் வீடு விற்பனை நிலவரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான அனராக். அதில் 2026 ஆம் நிதி ஆண்டில் இந்த நகரங்களில் எல்லாம் வீடு விற்பனை எண்ணிக்கை குறைந்தாலும் மதிப்பளவில் 20% அதிகரிக்கும் என தெரிவிக்கிறது.
2025 ஆம் ஆண்டில் இந்த பெருநகரங்களில் எல்லாம் மொத்தமாக 4,22,765 வீடுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன இவற்றின் மொத்த மதிப்பு 5.59 லட்சம் கோடி ரூபாய். இது 2026 ஆம் நிதி ஆண்டில் 6.65 லட்சம் கோடி என 20 சதவீதமாக உயரும் என்கிறது அனராக் நிறுவனம். இந்நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குனர் பிரசாந்த் தாக்கூர் தற்போது ரியல் எஸ்டேட் சந்தை பெரிய அளவில் மாற்றம் கண்டு இருக்கிறது என கூறுகிறார்.
வீடு வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும் பிரீமியம் வீடுகளுக்கான, ஆடம்பர குடியிருப்புகளுக்கான டிமாண்ட் அதிகரித்து இருக்கிறது என தெரிவிக்கிறார் . அதாவது 2024 ஆம் நிதியாண்டில் வீடுகளின் விற்பனை உச்சத்தில் இருந்தது அது 2025 ஆம் நிதியாண்டில் படிப்படியாக குறைந்தது . எண்ணிக்கை அடிப்படையில் அது குறைந்திருந்தாலும் மதிப்பு அடிப்படையில் உயர்ந்து தான் இருக்கிறது என கூறுகிறார் . இதற்கு முக்கிய காரணம் ஆடம்பர குடியிருப்புகளை வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது.
2026 ஆம் நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் பெருநகரங்களில் அறிவிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களில் 42% ஆடம்பர குடியிருப்புகள் தான் என தெரிவிக்கிறார் . தற்போது இந்தியாவில் பிரீமியம் வீடுகளுக்கான தேவைதான் அதிகமாக இருக்கிறது என்றும் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்கள் , வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில் இந்த பிரீமியம் வீடுகளில் முதலீடு செய்வதாக தெரிவிக்கிறார் .
இதன் காரணமாக பில்டர்களும் தற்போது மலிவு விலை வீடுகளிலிருந்து பிரிமியம் வீடுகளை நோக்கி நகர தொடங்கி இருக்கின்றனர் . இதனால் குறைந்த எண்ணிக்கையில் வீடுகள் விற்பனை செய்தாலும் அவர்களுக்கான லாபம் என்பது அதிகரித்து தான் இருக்கிறது. இனி பெரு நகரங்களில் எல்லாம் 80 லட்சம் ரூபாய்க்கு கீழ் வீடுகள் என்பதே இருக்காது என தெரிவிக்கும் அவர் பில்டர்கள் மலிவு விலை வீடு திட்டங்களையே படிப்படியாக கைவிட்டு வருகின்றனர் என்கிறார்.


Click it and Unblock the Notifications