இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடவுள்ள ரூபாய் தாள்களில் மகாத்மா காந்தி மற்றும் ரவீந்திர நாத் தாகூர் படங்களை பயன்படுத்த உள்ளதாகவும், இது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இதுவரை உள்ள அனைத்து ரூபாய் தாள்களிலும் மகாத்மா காந்தியின் படமே இடம் பெற்றுள்ளது. இது பல வருடங்களாகவே அமலில் உள்ள ஒரு அம்சமாகும். இந்த நிலையில் மகாத்மா காந்தியின் படம் அகற்றப்படுகிறதா? என்ற பெரும் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தான் தற்போது ரிசர்வ் வங்கியின் அறிக்கை வந்துள்ளது.
மாதிரிகள் அனுப்பப்பட்டதா?
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) ஆகியவை மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் இரண்டு மாதிரிகளை ஐஐடி-டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியது.
அச்சிடப்படுமா ?
ஐஐடி-டெல்லி பேராசிரிரான திலீப் டி ஷஹானி இந்திய ரூபாய் நோட்டுகளில் வாட்டர்மார்க்ஸைத் தேர்ந்தெடுத்து, இறுதி ஒப்புதலுக்காக அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பவர் ஆவார். இதனால் மகாத்மா காந்தியின் படத்தோடு சேர்த்து ரவீந்திரநாத் தாகூர் , அப்துல் கலாம் ஆகியோரின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்படுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.
ரிசர்வ் வங்கி மறுப்பு
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, புதிதாக அச்சிடப்படவுள்ள ரூபாய் நோட்டுகளில், மகாத்மா காந்தியின் படத்துக்கு பதில், அப்துல் கலாம் மற்றும் ரவீந்திர நாத் தாகூர் படம் இடம்பெறவுள்ளதாக தகவல்களை மறுத்துள்ளது.
பழைய திட்டமே தொடரும்
மேலும் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. நடைமுறையில் உள்ள திட்டமே தொடர்ந்து கடைபிடிக்கப்படும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த வழக்கம் இனியும் தொடரும் என ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது.
முந்தைய பரிந்துரை
கடந்த 2017ல் புதிய ரூபாய் நோட்டுகளுக்கான அம்சங்களில் பரிந்துரை செய்யப்பட்ட, உருவப்படங்களில் ஒன்று அப்துல் கலாம் மற்றும் ரவீந்திர நாத் தாகூர் பெயர் இடம் பெற்றது நினைவுகூறத்தக்கது.