சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் காரணத்தால் இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக மத்திய அரசிடம் பெட்ரோல், டீசல் உட்பட அனைத்து எரிபொருளையும் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வரக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை மட்டும் அல்லாமல் உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வருவது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான பதிலைத் தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி
சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பிற்குள் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றைக் கொண்டு வர எவ்விதமான அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் மூலம் தொடர்ந்து எரிபொருள் அனைத்தும் ஜிஎஸ்டி வரிக்கு வெளியிலேயே இருக்கும்.
ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு
மேலும் எரிபொருளை எப்போது ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்து குறித்த நாள்-ஐ அறிவிக்கும். மாநில அரசுகளும் இடம் பெற்றிருக்கும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் இதுவரை எவ்விதமான பரிந்துரையும் செய்யவில்லை எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வருவாய் அளவீடு
நாட்டின் வருவாய் அளவீட்டையும் அதன் பாதிப்புகளையும் ஆய்வு செய்து எரிபொருளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர சரியான தருணத்தில் இதற்கான பணிகளைச் செய்யும். மேலும் சில வாரங்களுக்கு முன்பு நிர்மலா சீதாராமன் மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்து எரிபொருள் மீது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
5 எரிபொருட்களுக்கு விலக்கு
இந்தியாவில் ஜூலை 1, 2017ல் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்த போது அனைத்து பொருட்களும், சேவைகளும் இதனுள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய 5 பொருட்கள் மட்டும் ஜிஎஸ்டிகுள் கொண்டு வர விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் மத்திய மற்றும் மாநில அரசுக்கு பெரும் பகுதி வரி எரிபொருள் மீது விதிக்கப்படும் வரியின் மூலம் கிடைக்கிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள்
இந்த 5 எரிபொருட்களும் ஜிஎஸ்டி அமைப்பிற்குள் கொண்டு வரப்படாத நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விருப்பம்போல் வரியை விதித்து அதிகளவிலான வருமானத்தைப் பெறலாம். இதன் படி மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் கலால் வரி மூலம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
சர்வதேச சந்தை நிலவரம்
இதேவேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகளவில் குறைக்கப்பட்டு இதன் விலை அதிகரித்த நிலையில் இந்தியா விலை விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் முழுவதும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்போவது இல்லை என OPEC நாடுகள் முடிவு செய்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
5 மாநில தேர்தல் எதிரொலி
இதன் எதிரொலியாகப் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது 70 டாலர் அளவை அடைந்துள்ளது. இதே நேரத்தில் 5 மாநில தேர்தல் எதிரொலியாக இந்தியக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தாமல் வைத்துள்ளது உள்ளது. இதனால் 2 வாரங்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
தேர்தலுக்குப் பின்
இந்த நிலை கட்டாயம் தேர்தல் முடிந்த பின்பு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக வாக்குப்பதிவு முடிந்த பின்பு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டும் அல்லாமல் விமான எரிபொருள், இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.