அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பல பொருளாதார நிபுணர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது ஏற்கனவே பயமுறுத்தும் விதத்தில் இருந்தாலும், அரசின் நடவடிக்கைகள் நிச்சயம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை ஒரு புறம் இருந்து வருகிறது.
எனினும் நோபல் பரிசு பெற்ற வங்க மண்ணில் பிறந்து, அமெரிக்காவில் வசித்து வரும் அபிஜித் பானர்ஜி அவ்வப்போது இந்தியா பொருளாதாரம் குறித்து, தனது கருத்தினை கூறி வருகிறார்,
சரி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒருவர், அதுவும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், நிச்சயம் இந்திய பொருளாதாரம் குறித்து கூறியுள்ளதை மற்றவர்கள் கூறியது போல் தவிர்க்க முடியாது அல்லவா? சரி அப்படி என்னதான் கூறியுள்ளார் வாருங்கள் பார்க்கலாம்.
இந்திய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை
இந்திய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை விடுத்த அபிஜித் பானர்ஜி, நாம் மிக மோசமான பொருளாதார மந்த நிலைக்கு அருகில் இருக்கிறோம் என்றும் எச்சரித்துள்ளார். அதுவும் 1991ல் நிலவி வந்த பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார். மேலும் மத்திய அரசானது வளர்ச்சியை புதுப்பிக்க தேவையை தூண்டுவதில் மிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் அடாவில் பேச்சு
கடந்த திங்கட்கிழமையன்றும் மும்பையில் நடந்த எக்ஸ்பிரஸ் அடாவில் பேசிய பானர்ஜி, இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய முக்கிய பிரச்சனையே தேவை தான். நீங்கள் நிச்சயம் அதை தூண்ட விரும்புகிறீர்கள். மேலும் மொத்த உள் நாட்டு உற்பத்தி குறித்து கவலை தெரிவித்த பானர்ஜி, 2014 முதக்ல் 2018 வரையிலான காலத்தில் சராசரி நுகர்வுகள் குறைந்துவிட்டன என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
வளர்ச்சியை ஊக்குவிக்க வழி
மேலும் மொத்த உள் நாட்டு உற்பத்தியை தவிர, ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடு என அனைத்தும் 1991ல் இருந்தது போலவே தெரிகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருங்க காரணமாக அமைந்துவிட்டது. மேலும் நாம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆக வளர்ச்சியை புதுப்பிக்க நம்மிடம் இருக்கும் ஒரே வழி நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிப்பது தான் என்றும் கூறியுள்ளார்.
ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி
இது தவிர நகர்புறம் மற்றும் கிரமப்புறங்களை இணைக்கும் ரியல் எஸ்டேட் துறையானது மிக மந்த மடைந்துள்ளது. இதனால் இத்துறையில் பணி புரியும் இளைஞர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் இத்துறையில் பெருமளவில் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பல முறை எச்சரிக்கை
ஏற்கனவே பல முறை எச்சரிக்கை விடுத்த பானர்ஜி ஒவ்வொரு முறையும் கூறுவது இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது என்பது தான். ஆக அரடு விரைவில் விரைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் கோரிக்கை.