உலகின் முன்னணி டெலிகாம் உபகரணம் மற்றும் பியூச்சர் போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கவும், ஆராய்ச்சி பிரிவில் அதிகளவில் முதலீடு செய்ய வேணடும் எனத் திட்டத்துடன் நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கையை எடுக்க உள்ளது.
நோக்கியாவின் புதிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் அடுத்த 2 வருடத்தில் இந்நிறுவனத்தில் இருந்து சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
நோக்கியாவின் புதிய நிர்வாகம்
கடந்த வருடம் நோக்கியா நிறுவனத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள தலைமை நிர்வாக அதிகாரியான Pekka Lundmark, நோக்கியாவின் சக போட்டி நிறுவனமான எரிக்சன் நிறுவனத்திற்கு இணையாக வளர்ச்சி அடைய வேண்டும் என மிகப்பெரிய இலக்குடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
4 வர்த்தகக் குழுக்கள்
Pekka Lundmark தலைமையிலான நோக்கியா ஆக்டோபர் மாதம் வெளியிட்ட புதிய திட்டங்கள் படி, நோக்கியா நிறுவனம் 4 வர்த்தகக் குழுக்களாக இயங்கும், எதிர்வரும் அனைத்து வர்த்தகத்தையும், வாய்ப்புகளையும் கைப்பற்றி முன்னேறும் என்று திட்டமிடப்பட்டது.
5ஜி சேவைகள்
இதுமட்டும் அல்லாமல் உலக நாடுகளில் தற்போது 5ஜி சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கான கட்டமைப்புகள், தொழில்நுட்பம் ஆகியவற்றை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஹூவாய் பின்னடைவு
இதேவேளையில் 5ஜி சேவை சார்ந்த கருவிகள், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஹூவாய் நிறுவனத்திற்கு உலகின் பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை பெருமளவில் நோக்கியா பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
நீண்ட காலத் திட்டம்
Pekka Lundmark குறுகிய கால வர்த்தகத்தைக் கைப்பற்றுவதைத் தாண்டி நீண்ட கால நோக்கில் புதிய வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் என முக்கியக் குறிக்கோள் உடன் உள்ளார். இதுமட்டும் அல்லாமல் ஓவ்வொரு வர்த்தகப் பிரிவுக்கும் வருடாந்திர நிதியியல் இலக்கு அளித்துள்ளார்.
10,000 ஊழியர்கள் பணிநீக்கம்
மேலும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம் உட்படப் பிற நிர்வாக மாற்றங்கள் மூலம் நோக்கியா 2023ஆம் ஆண்டுக்குள் வருடம் 600 மில்லியன் யூரோ முதல் 700 மில்லியன் யூரோ வரையிலான தொகையைச் சேமிக்க முடியும் எனக் கணித்துள்ளது.