உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்க சூழலில் பொருளாதாரம் மந்தநிலை (ரெசிஷன்) பற்றிய கவலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளும் தங்களது பொருளாதார வளர்ச்சி அளவீட்டைக் குறைக்கத் துவங்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த சில நாட்களில் நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ள நிலையில் நாட்டின் வளர்ச்சி அளவீட்டைக் குறைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள வேளையின் நோமுரா முக்கிய கணிப்பை வெளியிட்டுள்ளது.
நோமுரா
நோமுரா நிறுவனத்தின் ஆய்வாளர்கள் இந்தியாவின் 2023 வளர்ச்சி அளவாக 5.4 சதவீதம் இருக்கும் என் முன்பு கணித்திருந்த நிலையில் தற்போது 4.7% ஆகக் குறைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் அடுத்த ஆண்டிலும் வளர்ச்சி அளவுகள் குறையும் என்று எதிர்பார்க்கிறது நோமுரா அமைப்பு.
முக்கியக் காரணி
அதிகப் பணவீக்கம், பணவியல் கொள்கை இறுக்கம், செயலற்ற தனியார் கேபெக்ஸ் வளர்ச்சி, மின்சார நெருக்கடி மற்றும் உலகளாவிய வளர்ச்சி மந்தநிலை ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது என நோமூரா தெரிவித்துள்ளது.
வளர்ச்சி அளவீடுகள்
இதன் விளைவாக, 2023 ஜிடிபி வளர்ச்சியை 5.4% இல் இருந்து 4.7% ஆகக் குறைத்துள்ளோம் என்று நோமுரா நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்திய பணவீக்கம்
இந்தியாவில் கச்சா மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, மே மாதத்தில் 7.04% ஆக இருந்த இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் 7.01% ஆகக் குறைந்துள்ளது.
அமெரிக்கப் பணவீக்கம்
ஆனால் அமெரிக்காவில் புதன்கிழமை வெளியான பணவீக்க தரவுகள் அடிப்படையில் ஜூன் 2022ல் அமெரிக்காவின் ரீடைல் பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 1980 ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 9 சதவீதத்தைத் தொட்டது. அதன் பின்பு இப்போது தான் 9 சதவீத அளவீட்டைத் தாண்டி 9.1 சதவீத அளவீட்டைத் தொட்டுள்ளது.
ஜெர்மனி வளர்ச்சி அளவீடு
இதேபோல் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பின்பு அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் மத்திய வங்கி நடப்பு ஆண்டுக்கான பொருளாதாரம் வளர்ச்சியை 4.2 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதமாகக் குறைத்துள்ளது.