கடந்த சில ஆண்டுகளாக வீடு வாங்குவதற்காக லோன் வாங்குவது என்பது மக்களிடம் உள்ள ஒரு முக்கிய வழக்கமாக உள்ளது. வாடகை வீட்டில் வசிப்பதை விட லோன் வாங்கி சொந்த வீட்டில் வசிப்பது என்பது ஒரு திருப்திகரமான செயல் என்று பலர் கருதுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் அதிக அளவில் வீட்டுக்கடன் வாங்க முன்வந்துள்ளதாக சிறப்பு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிராமப்புறங்களில் வீட்டுக்கடன் வாங்குவதில் பெண்கள் அதிக பங்கை கொண்டவர்களாக உள்ளனர் என்று எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக குஜராத், ஹரியானா, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள 20 மாவட்டங்களில் 45 சதவீதம் வீட்டுக் கடனை பெண்கள் வாங்கி உள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன் வாங்கும் பெண்கள்
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புதிய வீட்டுக் கடன் வழங்கல்களில் பெண்கள் அதிக பங்கை கொண்டுள்ளனர். சத்தீஷ்கர், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள 20 மாவட்டங்களில் சராசரியாக 49 சதவீத பெண்கள் வீட்டுக்கடன் பெற்றுள்ளனர். குஜராத்தில் உள்ள டாங் மாவட்டத்தில் 86 சதவீத பெண்கள் வீட்டுக்கடனை பெற்றுள்ளனர்.
வீட்டுக்கடன் வளர்ச்சி
இந்த ஆண்டில் மொத்த வீட்டுக்கடன் 10 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது என்றும், டயர் 2 , டயர் 3 மற்றும் டயர் 4 மாவட்டங்களில் உள்ள மக்கள் தொற்றுநோய்க்குப் பின் டயர் 1 மாவட்டங்களை விட அதிக வீட்டுக்கடன் பெற்றுள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றது.
வீட்டுக்கடன் சதவிகிதம்
மொத்தமுள்ள வங்கிக்கடனில் வீட்டுக் கடன்களின் பங்கு 2020ஆம் ஆண்டு 13.1 சதவீதம் என இருந்த நிலையில் 2022ஆம் ஆண்டு 14.4 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
வீடுகள் விலை உயர்வு
பெரிய நகரங்களை விட சிறிய நகரங்களில் வீடுகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் 13%, கவுஹாத்தியில் 15.7%, ராய்ப்பூரில் 19.1%, சூரத்தில் 11.2%, வதோதராவில் 12.6%, ஜெய்ப்பூரில் 9.6%, கோவையில் 17.7% வீட்டு விலைகள் அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
கிராமப்புறங்களில் வீட்டுக்கடன்
கிராமப்புற மாவட்டங்களில் அதிகரித்து வரும் வீட்டுக் கடன் தேவைக்கு SVAMITVA திட்டன்மும் ஒரு காரணம். இந்த திட்டம் ஏற்கனவே பல கிராமங்களை உள்ளடக்கிய ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக மாவட்டங்களில் வீட்டுக்கடன் வழங்குதல் வேகமாக அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது.