ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய டெக் மற்றும் முதலீட்டு நிறுவனமாக இருக்கும் சாப்ட்பேங்க் கடந்த சில மாதங்களாகவே நிதி நெருக்கடியாலும், வர்த்தக சரிவாலும், கொரோனா என பல்வேறு மோசமான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டு உள்ளது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் வர்த்தக சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்ட்பேங்க் முதலீட்டு குறைப்பு, செலவு கட்டுப்பாடு, வர்த்தக விரிவாக்கத்திற்கு தற்காலிக நிறுத்தம், ஊழியர்கள் பணிநீக்கம் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சாப்ட்பேங்க் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆர்ம் (ARM) நிறுவனத்தை கிராபிக்ஸ் சிப் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு துறையில் முன்னோடியாக இருக்கும் Nvidia நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பையும் இருதரப்பு நிறுவனங்களும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பால் ஆர்ம் நிறுவன ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது..!!
ஆர்ம் நிறுவனம்
பிரிட்டன் நாட்டின் முன்னணி செமிகன்டக்டர் மற்றும் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான ஆர்ம் தயாரிக்கும் சிப்கள் கம்பியூட்டர், ஐபோன் முதல் டிவி வரையில் பல துறையில் முக்கிய தொழில்நுட்பமாக உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் neural network processing-காக ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு சிப்-ஐ வெளியிட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த மாபெரும் நிறுவனம் தான் இந்த ஆர்ம்.
40 பில்லியன் டாலர்
சிப் தயாரிப்பிலும் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு-வின் பவர்ஹவுஸ் ஆக விளங்கும் ஆர்ம் நிறுவனத்தை கிராபிக்ஸ் சிப் தயாரிப்பில் முன்னோடியான Nvidia நிறுவனம் சுமார் 40 பில்லியன் டாலர் தொகைக்கு சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்ற இறுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியானது.
ஆதிக்கம்
இந்த டீல் மூலம் Nvidia தற்போது கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தோடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் பெற உள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் செம்கன்டக்டர் துறையில் மிகப்பெரிய போட்டி உருவாகும் என்றும், Nvidia இன்டெல் நிறுவனத்துடன் போட்டி போட்டும் அளவிற்கு கூடிய விரைவில் உயர உள்ளது என்றும் கணிக்கப்படுகின்றது.
ஊழியர்களுக்கு ஜாக்பாட்
இந்த 40 பில்லியன் டாலர் ஒப்பந்தம் மூலம் ஆர்ம் நிறுவன ஊழியர்களுக்கு சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவன பங்குகளை கொடுக்க உள்ளதாக Nvidia நிறுவனம் தெரிவித்துள்ளது.
Nvidia-வின் இந்த அறிவிப்பு ஆர்ம் நிர்வாக கைமாற்றத்தில் ஊழியர்கள் மத்தியில் ஏற்படும் பயத்தையும், சலசலப்பையும் அடக்கி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
10 சதவீத பங்குகள் மட்டுமே
Nvidia - சாப்ட்பேங்க் மத்தியிலான டீல் தற்போது இரு தரப்பு மத்தியிலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் முழமையான பங்கு மற்றும் நிதி மாற்றங்கள் அடுத்த 18 மாதங்களில் நிறைவு பெறும் என தகவல் கிடைத்துள்ளது.
இந்த 40 பில்லியன் டாலர் மூலம் ஆர்ம் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் மட்டுமே சாப்ட்பேங்க் நிர்வாகத்திடம் இருக்கும் மீதமுள்ள பங்குகளையும், மொத்த வர்த்கத்தையும் Nvidia கைப்பற்றியுள்ளது.
சாப்ட்பேங்க்
2016ல் முதலீட்டு சந்தையிலும், வர்த்தக விரிவாக்கத்திலும் உச்சத்தில் இருந்த சாப்ட்பேங்க் மற்றும் அந்நிறுவனத்தின் முதலீட்டு திட்டமான விஷன் பன்ட் மூலம் ஆர்ம் நிறுவனத்தை மொத்தமாக சுமார் 31 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. தற்போது வர்த்தக சரிவாலும் நிதி நெருக்கடியாலும் 40 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது சாப்ட்பேங்க்.