இந்தியாவின் சிறந்த பெண் தொழில் முனைவோர்களில் ஒருவராக திகழ்பவர் ஃபல்குனி நாயர். இவர் நய்கா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாவார்.
இன்றைய இளம் பெண்கள் விரும்பும் பேஷன் பொருட்களில் பலவற்றை நய்கா நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. இது பேஷன் மற்றும் காஸ்மெடிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வரும் பேஷன் நிறுவனமாகும்.
அதுமட்டும் சொந்தமாக ஒரு பிராண்டையும் உருவாக்கி அதனையும் நய்கா நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. நய்காவில் சுமார் 2600-க்கும் மேற்பட்ட வெளி நாட்டு பிராண்டுகள் இடம் பெற்றுள்ளன.
பாதியாக சரிந்த லாபம்
இப்படி இந்திய பெண்களை கவரும் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பல்குனி நாயருக்கு கடந்த மார்ச் காலாண்டு பெரும் ஏமாற்றமானதாகவே வந்துள்ளது. மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8.56 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 16.8 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பாதிக்கும் மேலாக லாபம் சரிவினையே கண்டுள்ளது.
வருவாய் அதிகரிப்பு தான்
லாபம் குறைந்திருந்தாலும், இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதம் செயல்பாட்டின் மூலம் 31% அதிகரித்து, 973.32 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் 740.52 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாங்கும் திறன் சரிவு?
நய்கா நிறுவனம் கடந்த 2022ம் நிதியாண்டில் பல்வேறு சவால்களுக்கும், நெருக்கடிக்கும் மத்தியில் நல்ல வருவாயினையே கண்டுள்ளது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோரின் செலவினை குறைக்க வழிவகுத்துள்ளது. முன்னதாக கொரோனாவும் மக்களின் வாங்கும் திறனை குறைத்துள்ளது.
2022ம் நிதியாண்டில் என்ன லாபம்?
இந்த நிறுவனத்தின் GMV விகிதம் கட ந்த மார்ச் காலாண்டில் 45% அதிகரித்து, 179.79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த 2022ம் நிதியாண்டில் 71% அதிகரித்து, 693.32 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் விகிதம் 32% அதிகரித்து, 984.45 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 2022ம் நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 41.3 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 33% சரிவினைக் கண்டுள்ளது.
மெதுவான வளர்ச்சி
இந்த நிறுவனம் பியூட்டி மற்றும் பர்சனல் கேர் பொருட்கள் விற்பனையில் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இது இனி வரவிருக்கும் காலாண்டுகளிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது மெதுவான வளர்ச்சியில் உள்ளது.
இன்றைய பங்கு விலை
எனினும் இந்த நிறுவனத்தின் தனித்துவமான பொருட்கள், வணிக மாடலானது வளர்ச்சியினை பதிவு செய்ய காரணமாக அமைந்துள்ளது. மார்ச் காலாண்டில் மட்டும் புதியதாக 6 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதுவே இதற்கு சிறந்த உதாரணம். இதற்கிடையில் இப்பங்கின் விலையானது இன்று சற்று குறைந்து, பி எஸ் இ-யில் 1358 ரூபாயாக முடிவடைந்துள்ளது.