உலகமே ஒருவித பதற்றத்தில் இருக்கிறது. ஒருபுறம் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் மேகங்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை சூழ்ந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக எகிறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் இனி பெட்ரோல் விலை என்னவாகுமோ என்ற அச்சத்தில் சாமானிய மக்கள் தவித்து வரும் வேளையில், இந்திய எரிசக்தி துறைக்கு மற்றொரு பேரிடி விழுந்திருக்கிறது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான, ரோஸ் நெஃப்ட் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற நயாரா எனர்ஜி, தனது ஆலையை அடுத்த 35 நாட்களுக்கு முழுமையாக மூடப் போவதாக அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில் நடக்கும் இந்த முடக்கம், இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் சுமார் 8%-ஐ கொண்டது. இது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றப்போகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஏற்கனவே தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் இன்னும் 8% உற்பத்தி குறைவா? சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகம் முடங்கிக் கிடக்கும் இந்த இக்கட்டான நேரத்தில், நயாரா எடுக்கும் இந்த முடிவு இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி பாதிக்குமோ என்ற கேள்வியானது பலர் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய அரசு வைத்திருக்கும் எண்ணெய் இருப்பு இந்தியாவைக் காப்பாற்றுமா? அல்லது தட்டுப்பாடு தலை தூக்குமா? இதன் பின்னணியில் உள்ள விஷயங்களை விரிவாகப் பார்ப்போம்.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து நயாரா எனர்ஜி நிறுவனம், சுமார் 35 நாட்களுக்கு தனது உற்பத்தி செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், இந்த உற்பத்தி நிறுத்தம் மேலும் சிக்கலை அதிகரிக்க வழிவகுக்கும். சொல்லப்போனால் இன்னும் எரிபொருள் தட்டுப்பாட்டை அதிகரிக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து தொடங்கப்படும் இந்த உற்பத்தி நிறுத்தம் 35 நாட்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக இதுபோன்ற திட்டங்கள் திட்டமிடப்பட்டது தான் என்றாலும், இது தற்போதைய சூழலில் இந்திய பொருளாதாரத்திலும், சாமானியர்களின் பாக்கெட்டையும் பதம் பார்க்கலாம். மொத்தத்தில் இது மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல, சர்வதேச விநியோகத்தில் தான் பிரச்சனை எனில், உள்நாட்டு சப்ளையிலும் பிரச்சனை வருமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நயாரா எனர்ஜி நிறுவனத்தின் பெரும்பாலான உற்பத்தி பொருட்கள் உள்நாட்டு சந்தையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் சர்வதேச தடைகளுக்கு பிறகு, இந்நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதி கணிசமாக குறைந்து விட்டது. ஆக இந்த நிறுவனம் தயாரிக்கும் எரிபொருளில் பெரும் பகுதி, தங்களின் உற்பத்தி திறனை விட, அதிக அளவில் விற்பனை செய்யும் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ளவை நயாரா நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 7,000 பெட்ரோல் பங்குகள் கொண்ட வலையமைப்பு மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த 35 நாள் முடக்கத்தின் போது, தங்களின் 7,000 பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் விநியோகம் எந்தவித தடையும் இன்றி சீராக நடப்பதை உறுதி செய்ய, நயாரா நிறுவனம் போதுமான அளவு எரிபொருள் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சப்ளை குறையலாம். இருப்பினும் இந்த முடக்கம் குறித்து நயாரா இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications