இன்றைய காலகட்டத்தில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக இந்தியா, ஈடு செய்ய முடியாத அளவுக்கு மனித உயிர்களையும், பொருளாதார வீழ்ச்சியினையும் சந்தித்து வருகின்றது.
ஒரு புறம் மொத்த கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும், குறிப்பிட்ட மாநிலங்களில் இன்னும் மிக மோசமான நிலையிலேயே உள்ளது.
இதற்கிடையில் இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் கொரோனா நிவாரண பொருட்களையும் உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன.
ஆக்சிஜன் உதவி
இதற்கிடையில் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் என பலவற்றையும் அனுப்பிய சவுதி அரேபியா தற்போது மீண்டும் உதவிகளை வாரி வழங்கியுள்ளது. கடந்த மாதமே சவுதி இந்தியாவுக்கு 80 டன் லிக்விட் ஆக்சிஜனை வழங்கியது. இந்த நிலையில் தற்போது 60 டன் ஆக்சிஜன் அடங்கிய மூன்று கொள்கலனை அனுப்பியுள்ளது.
100 கன்டெய்னர்கள்
இவற்றோரு 100 கன்டெய்னர்களையும் அனுப்பியுள்ளது. இந்த கொரோனா நிவாரண பொருட்கள் ஜூன் 6, 2021 அன்று மும்பைக்கு வந்து சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்தியாவின் எண்ணெய் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சவுதியின் இளவரசர் அப்துல்ஸீஸிக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்..
உலக நாடுகள் உதவி
இரண்டாம் அலையை எதிர்த்து போராடி வரும் நிலையில், ஆக்சிஜனுக்காக திணறி வருகின்றது இந்தியா. இந்த நிலையில் ஆக்சிஜனுக்காக வளைகுடா நாடுகளை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. இதற்கிடையில் தான் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. இப்படியொரு கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு இது போன்ற உதவிகள் மக்கள் மனதில் ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளன எனலாம்.
சவுதிக்கு நன்றிகள்
ஏற்கனவே அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் இருந்தும் நிவாராண பொருட்கள் வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பல நாடுகள் ஒண்றினைந்துள்ளன. அந்த வகையில் சவுதி வெறுமனே இந்தியாவினை ஒரு வர்த்தக நாடாக பார்க்காமல் உதவிகளை செய்து வருவது மிக நல்ல விஷயமே. இதற்காக சவுதிக்கு நாமும் ஒரு சல்யூட் வைப்போமே.
கச்சா எண்ணெய் சரிவு
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இந்தியாவில் முதல் கட்ட பரவல் குறைந்த நிலையில், குறைந்த கச்சா எண்ணெய் தேவையானது, மீண்டு வர தொடங்கியது. ஆனால் முன்னதாக கச்சா எண்ணெய் தேவையானது முடங்கிய நிலையில், கச்சா எண்ணெய் விலையானது அதல பாதாளம் நோக்கி சென்றது. ஒரு கட்டத்தில் மைனஸில் கூட சென்றது நினைவுகூறத்தக்கது.
தேவை அதிகரித்தது
அந்த சமயத்தில் அதிகப்படியான விலை சரிவினை மேற்கொண்டு தடுக்க, ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியினை கூட்டாக குறைத்தன. ஆனால் அப்போது இந்தியா உள்பட பல நாடுகளிலும் கடுமையான லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. போக்குவரத்துகள் இயங்க ஆரம்பித்தன. தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்தன. இதனால் கச்சா எண்ணெய் தேவையும் மீண்டும் அதிகரித்தது.
கோரிக்கை நிராகரிப்பு
இப்படி ஒரு நிலையில் தான் இந்தியா சவுதியிடம் எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க கேட்டது. ஆனால் சவுதி ஆசியாவின் சில சுத்திகரிப்பாளர்களுக்கு சப்ளையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியது. எனினும் இந்தியாவுக்கு குறைக்க மாட்டோம். ஆனால் அதிகப்படியான எண்ணெய் அனுப்ப முடியாது என நிராகரித்து விட்டது.
தனியார் வாகன பயன்பாடு அதிகரிப்பு
ஆனால் இந்தியாவில் ஏற்கனவே விலை உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், இன்னும் எரிபொருட்கள் விலை அதிகரிக்குமோ என்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான், இந்தியா சவுதியிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்து, அமெரிக்காவிடம் அதிகரிக்க திட்டமிட்டது. ஆனால் இப்படியொரு நெருக்கடியான நிலையிலும் தற்போது கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் மத்தியில் வளைகுடா நாடுகளும் உதவி வருவது நெகிழ்வூட்டும் விஷயமாக பார்க்கப்படுகிறது.