ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்த நிலையில் கச்சா எண்ணெய் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் க்ரூடாயில் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஆனால் கடந்த வாரம் ரஷ்யா இந்தியா உட்பட நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ஒப்பந்தம் மூலம் இதன் விலை 99 டாலருக்கும் கீழ் குறைந்தது.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று கச்சா எண்ணெய் விலை 4 டாலர் வரையில் உயர்ந்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
சவுதி அரேபியா
ரஷ்யா மீது கடுமையான வர்த்தகத் தடை விதிக்கப்பட்ட நிலையில், உலக நாடுகள் அனைத்தும் தனது கச்சா எண்ணெய் தேவைக்கு OPEC நாடுகளை நம்பியிருக்கும் வேலையில், சவுதி அரேபியாவின் முக்கியமான எனர்ஜி டெர்மினலில் ஹூதி தாக்குதல் நடத்திய காரணத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள்
இதேவேளையில் அமெரிக்காவை போலவே ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்குவதைத் தடை விதிக்க முடிவு செய்து அதற்கான ஆலோசனை செய்து வருகிறது. இதனால் ஐரோப்பிய சந்தையில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் திங்கட்கிழமை 6 முதல் 8 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. தற்போது WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 6.10 சதவீதம் உயர்த்து 111.09 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 6.46 சதவீதம் உயர்த்து 114.78 டாலராகவும் உயர்ந்துள்ளது.
டீசல் விலை
இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை 136 நாட்களாக எவ்விதமான உயர்வையும் அறிவிக்காத மத்திய அரசு, 5 மாநில தேர்தல் முடிவிற்குப் பின்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள 40 சதவீத விலை உயர்வை ஈடு செய்ய மொத்த விலை விற்பனையில் மட்டும் ஒரு லீட்டர் டீசல் விலை 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications