இந்தியா, ஐரோப்பா மற்றும் உலகின் பல பகுதிகளில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் பல ஆலோசனைகளுக்குப் பின்பு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளின் அமைப்பான OPEC ஏப்ரல் மாதத்திற்குப் பின் மே முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருந்த விலை உயர்வு நிலை மாறி தற்போது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
OPEC அமைப்பு
OPEC அமைப்பில் இருக்கும் நாடுகள் 2020ல் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பை ஈடு செய்ய உலக நாடுகள் வேகமான வளர்ச்சிப் பாதையில் இருக்கும் போது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து அதன் விலையை அதிகளவில் உயர்த்தியது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.
சவுதி அரேபியா
இந்தச் சூழ்நிலையில் இந்தியா அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் சவுதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கக் கோரிக்கை விடுத்தும் உற்பத்தியை அதிகரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்தியா ஆதிக்கம்
இந்நிலையில் உலகின் 2வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக விளங்கும் இந்தியா அரபு நாடுகளிடம் செய்யும் வர்த்தகத்தைக் குறைத்து விட்டு அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்தது.
இந்தியாவின் பவர் ப்ளே
இந்தியா அரபு நாடுகளிடம் செய்யும் வர்த்தகத்தை இழந்தால் குறுகிய காலம் மட்டும் அல்லாமல் நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதை உணர்ந்த OPEC அமைப்பு நாடுகள் மே முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்திற்கு சுமார் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யைத் தினமும் கூடுதலாக உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
கச்சா எண்ணெய் தேவை
இதேவேளையில் இந்தியா உட்படப் பல ஐரோப்பிய நாடுகளில் புதிதாகப் பரவி வரும் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் காரணத்தால் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைந்தது ஆகிய இரு முக்கியக் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக WTI கச்சா எண்ணெய் விலை 59 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 60 டாலருக்கும் குறைந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல்
இதன் எதிரொலியாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாகத் தேர்தல் காரணமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தொடர்ந்து எவ்விதமான மாற்றமும் செய்யாமல் இருக்கும் வேளையில் அடுத்த விலை மாற்றத்தின் போது அதிகளவில் குறைய வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
இந்நிலையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 92.58 ரூபாயும், டெல்லியில் 90.56 ரூபாயும், கொல்கத்தாவில் 90.77 ரூபாயும், மும்பையில் 96.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளையில் டீசல் ஒரு லிட்டர் சென்னையில் 85.88 ரூபாய்க்கும், டெல்லியில் 80.87 ரூபாயும், கொல்கத்தாவில் 83.75 ரூபாய்க்கும், மும்பையில் 87.96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.