மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் இதற்கு சரியான மருந்து இல்லை என்பது தான்.
சீனாவின் வூஹான் மாகாணமே இதனால் மிக அலண்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல உலகம் முழுவதிலும் இதன் அச்சுறுத்தல் தற்போது நிலவி வருகிறது.
இந்த கொடிய வைரஸால் இதுவரை சுமார் 80 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்த கொடூரமான பரவும் வைரஸால் சுமார் 800 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எரிசக்தி தேவையை சீர்குலைக்கும்
இந்த நிலையில் இந்த கொடிய தொற்றுதலை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி அறிவிக்கப்பட்டால், உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலையும் உள்ளது. இது ஒரு புறம் எனில், மறுபுறம் கச்சா எண்ணெய் விலை மிக வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது. இது எரிசக்தி தேவையை சீர்குலைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை வீழ்ச்சி கண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பலி எண்ணிக்கை உயர்வு
இந்த கொடிய வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை சுமார் 80 பேராக அதிகரித்துள்ளதாகவும், இதனால் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று மட்டும் டபள்யூ டி ஐ கச்சா எண்ணெய் விலை 2.34% வீழ்ச்சி கண்டு தற்போது 52.92 டாலராக வர்த்தகமாகி வருகிறது. ஜனவரி 9ம் தேதியிலிருந்து சரிய தொடங்கிய கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து, இன்று வரை வீழ்ச்சி கண்டு கொண்டே செல்கிறது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
இந்த கொடிய வைரஸானது உலகம் முழுக்க தனது தொற்றுதலை தூண்டுகிறது என்றும், இந்த நோய் தொற்றுதலை தடுக்க சீனா சந்திர புத்தாண்டு விடுமுறையை நீட்டித்தால், கொரோனோ வைரஸ் பாதிப்பு கச்சா எண்ணெய் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் நுகர்வு சந்தையில் சீனா முக்கிய இடம் வகித்து வரும் நிலையில், அங்கு தற்போது தேவை குறையும் என்ற எண்ணமும் நிலவி வருகிறது. இதனால் கச்சா விலையானது கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
தேவை குறையலாம்
எண்ணெய் தேவையானது இந்த ஆண்டில் ஒரு நாளைக்கு 2,60,000 பீப்பாய்கள் குறைந்து, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலையிலிருந்து சுமார் 3 டாலர் வரை மிச்சப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. கோல்ட்மேன் சாச்ஸ் குழு இன்க் கடந்த வாரம், 2003 சார்ஸ் தொற்று நோய் வழிகாட்டியாக பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளது. மேலும் சவுதி அரேபியா இந்த நெருக்கடியான பிரச்சனை, எண்ணெய் விலையில் மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எரிபொருள் விலை
சர்வதேச அளவில் வீழ்ச்சி கண்டு வரும் கச்சா எண்ணெய் விலை காரணமாக, இந்தியாவிலும் எரிபொருள் விலை சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.76.56 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே ஒரு லிட்டர் டீசல் விலை 26 காசுகள் குறைந்து ரூ.70.47க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் படு வீழ்ச்சி கண்டு வந்தாலும், அதன் எதிரொலி இந்திய சந்தைகளில் அவ்வளவாக எதிரொலிக்கவில்லை என்றே கூறலாம்.