கொரோனாவினையும் மிஞ்சி ஒரு புயல் இந்தியாவினையும் நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா ரணகளத்திலும் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே ஆறுதலான விஷயம் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி தான்.
ஏனெனில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியானது, இந்திய பொருளாதாரத்திற்கு சற்றே ஆறுதல் கொடுத்து வந்தது.
உற்பத்தியை குறைக்க ஒப்பந்தம்
இந்த நிலையில் ஓபெக் நாடுகள் வரலாறு காணாத அளவு எண்ணெய் உற்பத்தி குறைப்புக்கு ஒபெக் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு 9.7 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒப்புக் கொண்டுள்ள நிலையில். தற்போது கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
கடந்த மாதம் சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தி குறைப்புகாக கோரிய நிலையில், ரஷ்யா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடியாது எனவும் கூறியது. இந்த நிலையில் உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கமும் படு வேகமாக அதிகரித்து வந்தது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையானது பாதாளத்தினை நோக்கி சென்றது.
சவுதி –ரஷ்யா பேச்சு வார்த்தை
இதெல்லாவற்றையும் விட சவுதி அரேபியா, குறைந்த விலையில் எண்ணெய் விற்பனை செய்யப் போவதாகவும், அதோடு உற்பத்தியை மிக அதிகளவில் அதிகரிக்க போவதாகவும் கூறியது. இந்த நிலையில் தான் தற்போது சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஏற்பட்டது.
விலை அதிகரிப்பு
இந்த நிலையில் கடந்த வாரத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 9.7 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி குறைக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டபள்யூடிஐ கச்சா எண்ணெய் விலையானது இன்று 3.7% அதிகரித்து 23.62 டாலர்களாக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
big oil deal நல்ல விஷயம்
இது குறித்து தனது கருத்தை கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் "big oil deal" ஆயிரக்கணக்கான வேலைகளை காப்பாற்றப்படலாம் என்றும், இதற்காக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுக்கும், சவுதி அரசர் சல்மானுக்கும் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது மிகப்பெரிய விஷயம் என்றும் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை என்னவாகும்?
கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு நல்ல விஷயமாக கருதப்பட்டாலும், இந்தியா போன்ற அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுக்கு, இது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். ஏற்கனவே 18 ஆண்டுகளில் இல்லாத விலை குறைந்த போதிலும் கூட, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. இந்த நிலையில் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கினால் பெட்ரோல் டீசல் விலை என்னவாகுமோ?